Skip to main content

ஐபிஎல் கிரிக்கெட்டும் அதிமுகவும் ஒன்றுதான்! -விருதுநகர் மாவட்ட பிரச்சாரத்தில் உதயநிதி கிண்டல்!  

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
IPL cricket and AIADMK are one and the same! - Udayanidhi joke in Virudhunagar district campaign!

இந்தியா கூட்டணி சார்பில் ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி மற்றும்  விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து, திமுக இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், விருதுநகர் மாவட்டத்திலுள்ள காரியாபட்டி, அருப்புக்கோட்டை மற்றும் திருமங்கலம் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தனது பிரச்சார உரையில்  “உங்களுடைய எழுச்சியையும் ஆர்வத்தையும் பார்க்கும்போது,  கை சின்னத்தில் நிற்கும் வேட்பாளரை பெருவாரியாக வெற்றிபெற வைத்துவிடுவீர்கள் என்ற நம்பிக்கை  வந்துவிட்டது. கடந்த 2019  தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீர்கள். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர் அழகர்சாமியைவிட ஒரு லட்சத்து 57 ஆயிரம் வாக்குகள்  வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தீர்கள்.   அதேபோல்,  2021 சட்டமன்றத்  தேர்தலில்  95000 வாக்குகள் வித்தியாசத்தில் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரனை  வெற்றிபெற வைத்தீர்கள். இந்தத் தேர்தல் மிக மிக முக்கியமான தேர்தல். இந்தத் தேர்தலின் தலைப்பே மாநில உரிமைகளை மீட்கும் தலைவரின் குரல்.

அதிமுக ஆட்சி செய்த கடந்த 10 ஆண்டுகளில் மாநில உரிமைகளை ஒன்றிய அரசிடம் அடகு வைத்துவிட்டார்கள். ஒன்றிய அரசு புதிய கல்விக் கொள்கைச் சட்டம் கொண்டுவந்தது. இப்போது பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் மாணவன்,  இந்தத் திட்டம் வந்தால்,  எட்டாம் வகுப்பிற்கு மட்டுமல்ல,  ஐந்தாம் வகுப்பிற்கும் பொதுத் தேர்வு எழுதக்கூடிய சூழ்நிலை ஏற்படும். கடந்த ஐந்து ஆண்டுகளில்  ஒன்றிய அரசுக்கு வரியாக ரூபாய் ஆறரை லட்சம் கோடி கொடுத்துள்ளோம்.  ஆனால்,  தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு வெறும் ஒன்றை லட்சம் கோடி ரூபாயை நமக்குத் திருப்பிக் கொடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு ஒரு ரூபாய் கொடுத்தால்,  நமக்கு அவர்கள் திருப்பிக் கொடுப்பது 28 பைசா மட்டும்தான்.  இனிமேல் மோடியின் பெயரை  28 பைசா பிரதமர் என்றே  நீங்கள் கூற வேண்டும்.  

கடந்த பத்து வருடங்களில்,  ஒன்றிய பிரதமர் மோடி எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தார்?   வெறும் தேர்தலுக்கு தேர்தல் மட்டுமே வரும் அவர்,  2014ல் வந்தார். வந்தவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.  வைத்தது ஒரு கல்.  அந்தக் கல்லையும் நான் எடுத்துட்டு வந்துட்டேன். இப்போது கடைசியாக 10 நாட்களில்,  தமிழ்நாடு முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கிறார்.  ஏனென்றால் தேர்தல் வந்துவிட்டது. ஒன்றிய பிரதமர் மோடிக்கு  தமிழ்நாட்டின் மீது உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால்,  புயல் பாதிப்பின் போது வந்திருக்க வேண்டும். வந்தாரா?   தமிழ்நாடு அரசின் சார்பில் நிவாரணம் கேட்கப்பட்டது,  கொடுத்தாரா?  தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தைத்தான் நான் கேட்கிறேன்.  உங்கள் அப்பன் வீட்டுப் பணத்தை நாங்கள் கேட்கவில்லை என்று கூறினேன்.  அதற்கு ஒன்றிய நிதி அமைச்சர் டெல்லியில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி,  எனக்குப் பாடம் எடுத்தார்.

புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் நம் தலைவர் ரூ.6000, ரூ.1000 என பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரணம் வழங்கினார்.  கடந்த ஜெயலலிதா ஆட்சியின்போது,  நீட் தேர்வை தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கவில்லை.  அரியலூர் அனிதாவில் ஆரம்பித்து சென்னையில் ஜெகதீசன் வரை 21 குழந்தைகள் இதுவரை தற்கொலை செய்துள்ளனர். அடுத்த நாளே ஜெகதீசனின் தந்தை செல்வசேகரனும் தற்கொலை செய்துகொண்டார். ஒரு குடும்பத்தையே இந்த நீட் தேர்வால் இழந்துள்ளோம்.  இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் நீட் தேர்வை நிச்சயமாக ரத்து செய்வோம் எனத் தேர்தல் வாக்குறுதியில் கொடுத்துள்ளோம்.  சுங்கச்சாவடிகள் முற்றிலும் அகற்றப்படும். கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய் ஆக்கப்படும் என வாக்குறுதி கொடுத்துள்ளோம். பெட்ரோல் விலை 75 ரூபாயும் டீசல் விலை 65 ரூபாயும் குறைக்கப்படும் எனத் தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளோம். இதையெல்லாம் நிச்சயமாக நம் தலைவர் செய்து காட்டுவார். கலைஞர் கூறுவதுபோல் சொல்வதைத்தான் செய்வோம் செய்வதைத்தான் சொல்வோம் என்பதில் தலைவர் உறுதியாக இருக்கிறார்.

கொரோனா காலத்தில் கோவிட் தடுப்பூசியைச் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திய ஒரே அரசு தமிழ்நாடு அரசு. கோவையில் கோவிட் பெருந்தொற்று காலத்தில் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை நேரில் சந்தித்த ஒரே முதலமைச்சர் நம் தமிழ்நாடு முதலமைச்சர்தான். சட்டமன்றத் தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம்.கட்டணம் இல்லாப்  பேருந்தின் மூலம் 483 கோடி பெண்கள் பயணம் செய்துள்ளனர். காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் 1 கோடியே 16 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இதில் சில சில குறைபாடுகள் இருந்தாலும்,  தேர்தல் முடிந்தபிறகு , அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.  

சிஏஜி அமைப்பு,  ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை வெளியிடும். ஒன்றிய அரசு செலவு செய்த கணக்கில் ரூபாய் ஏழரை லட்சம் கோடி கணக்கில் இல்லாமல் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. துவாரகா சாலைத் திட்டத்தில் ஒரு கிலோமீட்டர் சாலை இடுவதற்கு 250 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். மருத்துவக் காப்பீடு திட்டத்தில் இறந்துபோன 88 ஆயிரம் பேருக்கு மருத்துவக் காப்பீடு திட்டம் கொடுத்துள்ளனர். இதற்கெல்லாம்  பாடம் புகட்ட,  வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி உங்களுடைய வாக்குகளை கை சின்னத்தில் இடவேண்டும்.

அடுத்த 23 நாட்கள் இந்தப் பிரச்சாரத்தை மக்களிடம் வீடு வீடாகச் சென்று நீங்கள்தான் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும்.  இப்போது ஐபிஎல் விளையாட்டு நடந்துகொண்டிருக்கிறது. இதில் பல்வேறு அணிகள் உள்ளன.  ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டும்  அதிமுகவும் ஒன்றுதான்.  ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி, சசிகலா அணி, மோடி அணி, ஜெ.தீபா அணி இப்படி பல அணிகள் உள்ளன. இவர்களுக்கு பாடம் புகட்ட,  ஜூன் மூன்றாம் தேதி முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாள், ஜூன் நான்காம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாள். கலைஞரின் இந்த நூற்றாண்டு விழாவில்,  அவருக்குத் தேர்தல் வெற்றியைப் பரிசாக நாம் எல்லோரும் கொடுப்போம்.”  எனப் பேசினார் உதயநிதி ஸ்டாலின்.

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.