Skip to main content

''இனி ஒரு நொடியும் தன்னால் பாலியல் தொல்லையை தாங்க முடியாது'' - கண்ணீர் மல்க டி.ஐ.ஜியிடம் இளம்பெண் புகார்!

Published on 06/10/2020 | Edited on 06/10/2020

 

Incident in thiruchy

 

பெரம்பலூர் மாவட்டம் தொண்டமாந்துறையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 5 மாதங்களாக, இளைஞர் ஒருவரால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் தனக்கு பாதுகாப்பு வேண்டும் எனக்கோரி குடும்பத்துடன் திருச்சி டி.ஐ.ஜியிடம் புகார் கொடுத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பெங்களூரில் ஹோம் நர்சிங் துறையில் பணியாற்றி வந்த அந்த இளம்பெண் கரோனா காரணமாக வேலை இழந்த நிலையில் பூஞ்சோலை கிராமத்தில் உள்ள அவருடைய தாய் தந்தையுடன் வசித்து வருகிறார். ஏற்கனவே அந்தப் பெண்ணுக்கு சிறுநீரகப் பாதிப்பு இருக்கும் நிலையில் அதற்காக சிகிச்சையும் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சின்னண்ணன் என்ற இளைஞர் அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாரும் வீட்டில் இல்லாத நிலையில் வீட்டிற்குள் புகுந்த சின்னண்ணன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், இதனால் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் தாயார் ஓடிவந்து பார்த்தபோது அங்கிருந்து சின்னண்ணன் தப்பித்து ஓடியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெண்ணின் உடலில் காயங்கள் ஏற்பட்ட நிலையில் அதற்காக சிகிச்சை மேற்கொண்டு தற்பொழுது வீடு திரும்பி இருக்கிறார். 

 

பல மாதங்களாக பாலியல் தொல்லையை அனுபவித்து வரும் நிலையில், இனி ஒரு நொடியும் தன்னால் பாலியல் தொல்லைகளை பொறுத்துக்கொள்ள முடியாது எனவே தனக்குப் பாதுகாப்பு தரவேண்டும் என திருச்சி டி.ஐ.ஜியிடம் கண்ணீர்மல்க மனு கொடுத்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்