![Incident of setting fire at temple gate Police action](http://image.nakkheeran.in/cdn/farfuture/CFojOKza4g6joZAL_0XrTFlvcEDFtl_Jdpfb7Sp55Sc/1707797642/sites/default/files/inline-images/our-arrest-art_1.jpg)
மயிலாப்பூர் கோயில் வாசலில் தீ பற்ற வைத்த நபரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலின் நுழைவு வாயிலில் கடந்த 6 ஆம் தேதி (06.02.2024) இரவு சுமார் 11 மணியளவில் மர்ம நபர் ஒருவர் சில பொருட்களை பெட்ரோல் ஊற்றித் தீயிட்டு எரித்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் பரவி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோயில் நிர்வாகத்தின் கண்காணிப்பாளர் பாலமுருகன் என்பவர் சார்பில் மயிலாப்பூர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில் மயிலாப்பூர் போலீசார் கோயிலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வாசலில் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்ததாக அனந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த தீனதயாளன் என்பவரை பாரிமுனையில் வைத்து போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து இவரிடம் கோயில் முன்பு எதற்காக பெட்ரோல் ஊற்றி தீ பற்றி வைத்தார் என போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.