!['I am a central government journalist' - youth arrested in Kallakurichi](http://image.nakkheeran.in/cdn/farfuture/1YmYeUx-PLH2nGA9NQhg79QaQkXHmbIvGINhkjckies/1665481497/sites/default/files/inline-images/th_3323.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள பங்காரம் காட்டு கொட்டகை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அதிகாரிகளை மத்திய அரசின் அதிகாரம் கொண்ட செய்தியாளர் எனவும், தனக்கு மத்திய அரசு முத்திரையுடன் கூடிய இரண்டு கார் கொடுத்துள்ளனர் என கூறி ஏமாற்றி வந்து உள்ளார்.
இதே போல் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம் திருக்கோவிலூர் உட்பட பல்வேறு பகுதிகளிலும் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் ஆகியோரை ஏமாற்றி, மிரட்டி பணம் சம்பாதித்து வந்ததாக கூறப்படுகிறது. கள்ளக்குறிச்சி மட்டுமின்றி வெங்கடேசன், சென்னையில் பல பேரிடம் இதுபோன்று ஏமாற்றி பணம் பறித்து உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வெங்கடேசன் நிலத்திற்கு அருகாமையில் உள்ள வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தில், வேல்முருகனிடம் தான், மத்திய அரசு சார்ந்த பத்திரிகையாளர் என்ற பாணியில் பேசி, கொலை மிரட்டல் விட்டதோடு, வேல்முருகனை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் அஞ்சிய வேல்முருகன் சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் சின்ன சேலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த விசாரணையில் அவர் பத்திரிகையாளர் இல்லை என்பதும் போலியாக ஏமாற்றி வந்திருக்கிறார் என்பதும் தெரியவந்தது. மேலும், அவர் பயன்படுத்தி வந்த இரண்டு கார்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.