Skip to main content

சேலம் பெண் பியூட்டிஷியன் கொல்லப்பட்டது எப்படி? பரபரப்பு தகவல்கள்!

Published on 19/10/2021 | Edited on 19/10/2021

 

How was the Salem female beautician was passes away Exciting information

 

சேலம் பெண் பியூட்டிஷியன் கொல்லப்பட்டது எப்படி என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

சேலம் குமாரசாமிப்பட்டியைச் சேர்ந்தவர் நடேசன், அதிமுக பிரமுகர். இவருடைய அடுக்குமாடி குடியிருப்பில் பெங்களூருவைச் சேர்ந்த தேஜ் மண்டல் (26) என்ற இளம்பெண் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். 

 

மாற்றுத்திறனாளியான இவர், சேலத்தில் அழகாபுரம், பள்ளப்பட்டி, சங்கர் நகர் ஆகிய இடங்களில் அழகு நிலையம் மற்றும் மசாஜ் மையம் நடத்திவந்தார். இவரிடம் வேலை செய்துவந்த இரண்டு பெண்கள், ஒரு ஆண் ஆகிய மூன்று ஊழியர்களையும், தான் வசித்துவந்த அதே குடியிருப்பில் பக்கத்து வீட்டை வாடகைக்கு எடுத்து தங்க வைத்திருந்தார். 

 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டின் படுக்கை அறையில் இருந்த சிமெண்ட் அலமாரியில் ஒரு சூட்கேஸ் பெட்டிக்குள் தேஜ் மண்டல் மர்மமான முறையில் கொல்லப்பட்டு, சடலமாகக் கிடத்தப்பட்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அஸ்தம்பட்டி காவல் நிலைய காவல்துறையினர், தேஜ் மண்டலின் சடலத்தைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். 

 

உடற்கூறாய்வில், தேஜ் மண்டலை மூக்கு, வாய் பகுதியில் துணியால் அழுத்தி மூச்சுத்திணற வைத்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதற்கிடையே, அவருடைய அழகு நிலையத்தில் வேலை செய்துவந்த நான்கு பேரில் நிஷி, லப்லூ ஆகிய இரு பெண்களும் வங்கதேச நாட்டுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என தெரியவந்துள்ளதை அடுத்து, தனிப்பபடையினர் வங்கதேசம் விரைந்துள்ளனர். மேலும், இரு பெண்களும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களைத் தேடி இரண்டு தனிப்படை காவல்துறையினர் மும்பைக்கும், பெங்களூருவுக்கும் விரைந்துள்ளனர். 

 

கொலையாளிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகாமல் இருக்க, கேமராவின் கோணத்தை வேறு பக்கமாக திருப்பிவிட்டுச் சென்றுள்ளனர். இந்த வேலையை லப்லூ என்ற பெண்தான் செய்துள்ளார். அதனால் லப்லூவும், அவருடன் தங்கியிருந்த நிஷியும்தான் தேஜ் மண்டலை கொலை செய்திருக்க வேண்டும் என சந்தேகிக்கின்றனர்.

 

இது ஒருபுறம் இருக்க, தேத் மண்டல் செல்ஃபோனை எடுக்கவில்லை என அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் நடேசனுக்கு தகவல் அளித்த பிரதாப் என்ற இளைஞரையும் பிடித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்தனர். 

 

சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்த பிரதாப், சென்னையில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார். அவர், சென்னையில் உள்ள ஒரு மசாஜ் மையத்திற்குச் சென்றபோது அங்கு வைத்துதான் முதன்முதலில் தேஜ் மண்டலை சந்தித்துள்ளார். அந்த மையத்தில் வேலை செய்துவந்த தேஜ் மண்டல் அளித்த சேவை, பிரதாப்புக்கு பிடித்துப் போகவே, நாளடைவில் அவருடன் செல்ஃபோன் மூலம் தொடர்புகொண்டு நெருக்கத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார். மேலும், அவர்களுக்குள் உறவு இருந்துவந்துள்ளது.

 

இதையடுத்து தேஜ் மண்டலை சேலத்திற்கு அழைத்து வந்த பிரதாப், இருவரும் சேர்ந்து மசாஜ் மையங்களைத் தொடங்கியுள்ளனர். உண்மையில் இவர்கள், மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழிலையே நடத்திவந்திருப்பது தெரியவந்துள்ளது. முதலில் சேலம் அழகாபுரத்தில் மசாஜ் மையத்தைத் தொடங்கியுள்ளனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி ஒருவர் தேஜ் மண்டலிடம் மாமூல் கேட்டு அடிக்கடி தொந்தரவு கொடுத்துள்ளார். அதன்பிறகு அந்த இடத்தைக் காலி செய்துவிட்டு, பள்ளப்பட்டி, சங்கர் நகர் ஆகிய இடங்களில் மசாஜ் மையங்களைத் தொடங்கியுள்ளனர். 

 

இதில் பள்ளப்பட்டி மசாஜ் மையத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை பிரதாப்பும், சங்கர் நகர் மையத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை தேஜ் மண்டலும் பங்கிட்டு எடுத்துக்கொண்டுள்ளனர். எல்லாம் நல்லபடியாகச் சென்ற நிலையில்தான், கடந்த மாதம் பள்ளப்பட்டி அங்கம்மாள் காலனியில் உள்ள மசாஜ் மையத்தில் மாநகரக் காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களை மீட்டனர். பிரதாப் மீதும் வழக்குப் பதிவுசெய்தனர். இதையடுத்து அவர் தலைமறைவாகிவிட்டார். 

 

அதேநேரம், சங்கர் நகரில் உள்ள மசாஜ் மையத்திலும் காவல்துறையினர் சோதனை செய்து, அங்கிருந்தும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களை மீட்டனர். ஒரு பெண்ணை மட்டும் கைது செய்தனர். ஏனோ அப்போது தேஜ் மண்டலை மட்டும் கைது செய்யாமல் விட்டுவிட்டனர்.

 

இந்நிலையில்தான், கையில் தாராள பணப்புழக்கத்துடன் இருந்துவந்த தேஜ் மண்டலிடம் அவருடைய ஊழியர்கள் நிஷி, லப்லூ ஆகிய இருவரும் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். அந்தப் பணத்தைத் திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்ததால், தேஜ் மண்டல் அவர்களிடம் பணத்தைக் கேட்டு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தார். அப்போதுதான் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. 

 

சங்கர் நகர் மசாஜ் மையத்திற்கு ஆண், பெண்களை அழைத்துவரும் முக்கிய புரோக்கராக லப்லூ செயல்பட்டுவந்துள்ளார். அதனால் அந்த மையத்தில் எந்தளவுக்கு வருமானம் வருகிறது என்ற விவரம் எல்லாம் நிஷிக்கும், லப்லூவுக்கும் அத்துப்படியாகத் தெரியும் என்கிறது காவல்துறை. இது ஒருபுறம் இருக்க, சங்கர் நகர் மசாஜ் மையத்திலிருந்து கைது செய்யப்பட்ட ஒரு பெண், தற்போது ஜாமீனில் விடுதலை ஆகியுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையிலும் சில முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன. 

 

இவர் ஜாமீனில் வெளியே வந்த நேரத்தில் அவருடைய தாயார் இறந்துள்ளார். தாயாரின் இறுதிச் சடங்கு செலவுகளுக்காக தேஜ் மண்டலிடம் பண உதவி கேட்டுள்ளார். அப்போது தேஜ் மண்டல், மசாஜ் மைய சோதனையின்போது தன்னை கைது செய்யாமல் இருக்க, காவல்துறைக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவழித்துவிட்டேன். அதனால் இப்போது பணம் இல்லை என்று கூறி அவரை அனுப்பிவிட்டாராம். 

 

அந்த நேரத்தில் போலீஸ் அதிகாரிகள் இருவர் தேஜ் மண்டலை ரகசியமாக சந்தித்துவிட்டதும் இப்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

மாநகர காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடா, பாலியல் தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மசாஜ் செண்டர்களில் அதிரடி சோதனை நடத்திய நிலையில், முக்கிய குற்றவாளியைக் கைது செய்யாமல் இருக்க போலீசார் லஞ்சம் வாங்கியிருக்கிறார்கள் என்ற தகவல் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

தேஜ் மண்டல் கொலை வழக்கு குறித்து தனிப்படை காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல் தலைமுறையினர் வாக்கு யாருக்கு? சுவாரஸ்யமான தகவல்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Interesting facts about who the first generation voted for

நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்த இளைஞர்கள் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வாக்களித்திருப்பதும், சமூக  நலத்திட்டங்கள், ஊழல் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு  வாக்களித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவியது. தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர். முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் ஆதரவு யாருக்கு? என்பதில் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் முதன் முதலாக வாக்களித்துவிட்டு வந்த இளைஞர்கள், இளம்பெண்களிடம் பேசினோம். அவர்கள் ஊழல் மற்றும் சமூக நலத்திட்டங்களின் அடிப்படையில் வாக்களித்து இருப்பதும், பெரும்பாலானோர் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்திருப்பதும் தெரிய வந்தது.

இதில் இன்னொரு சுவாரஸ்ய தகவலும் கிடைத்தது. முதல் முறை வாக்களித்தவர்களில் இளம்பெண்கள் மாநில அரசின் செயல்திட்டங்களின் அடிப்படையிலும், இளைஞர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது ஒரே வயதாக இருந்தாலும் இளம்பெண்கள், இளைஞர்களின் சிந்தனை வேறு வேறாக இருக்கிறது. என்றாலும், அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக கூற மறுத்துவிட்டனர். எனினும், நம்முடைய கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் மூலம், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கிட்டத்தட்ட யூகிக்க முடிந்தது.

முதல்முறையாக வாக்களித்த அனுபவம் எப்படி இருந்தது?, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் பெற்றோரின் தலையீடு இருந்ததா?, உங்கள் வாக்கு தேசிய கட்சிக்கா? அல்லது மாநில கட்சிக்கா?, எதன் அடிப்படையில் வாக்களித்தீர்கள்?, உங்களைக் கவர்ந்த தமிழக அரசின் திட்டங்கள் என்னென்ன? ஆகிய கேள்விகளை முன்வைத்தோம். சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்கள் கூறியதாவது..

 Interesting facts about who the first generation voted for

அக்ஷய பிரியா(பி.எஸ்சி., மாணவி): முதல்முறையாக வாக்குச்சாவடிக்கு வந்து  வாக்களித்ததே ஜாலியான அனுபவமாக இருந்தது. யார் அதிகாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமோ அதை மனதில் வைத்தும், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டும் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பூர்ணிமா(பி.இ., மாணவி): ஒரு குடிமகளாக வாக்களிப்பது நமது கடமை. யாருக்கு ஓட்டுப் போடணும் என்று அப்பா, அம்மா உட்பட யாருடைய தலையீடும் இல்லாமல் நானாக சிந்தித்து வாக்களித்தேன். யார் வந்தால் நல்லது செய்வாங்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். நான் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இப்போதுள்ள அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் உள்ள நல்லது, கெட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

 Interesting facts about who the first generation voted for

அகல்யா(பி.காம்., சி.ஏ., மாணவி): முதல் முறையாக வாக்களிக்கப் போகிறோம் என்பதே சந்தோஷமாகத்தான் இருந்தது. எங்களுக்குனு ஒரு அடையாள அட்டை கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் இப்போதுள்ள அரசும் நல்லாதான் செயல்படுகிறது. இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.

சவுந்தர்யா(எம்.ஏ., மாணவி, அகல்யாவின் சகோதரி): இந்த நாட்டுக்கு ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை எங்களிடம் கொடுத்திருக்கிறார்களே என்று பெருமையாக இருக்கிறது. நானும், என் சகோதரி அகல்யாவும் ஒரு தேசியக் கட்சிக்குதான் ஓட்டுபோட்டோம். நாடு நல்ல நிலையில் செல்ல வேண்டும் என்பதாலும், வலிமையான பிரதமர் வேண்டும் என்பதாலும் வாக்களித்தோம். இப்போதுள்ள மத்திய அரசும், தமிழகத்தில், திமுக அரசும் நன்றாகத்தான் செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

நிவேதா(பி.ஏ., மாணவி): முதன் முதலாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது புது அனுபவமாக இருந்தது. நல்லவங்களுக்கு ஓட்டு போட்டிருக்கேன். பாரம்பரியான தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று சிந்தித்து வாக்களித்தேன். அரசு கலைக் கல்லூரியில் படிக்கிறேன். தமிழக அரசின் மகளிருக்கான இலவச பேருந்து திட்டமும், புதுமைப்பெண் திட்டமும் பிடித்திருக்கிறது.

 Interesting facts about who the first generation voted for

வெற்றிவேல் (பி.இ., மாணவர்): 140 கோடி மக்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை உணர்ந்து எல்லோருமே வாக்களிப்பது அவசியம். வாக்குப்பதிவு குறைவதை தடுக்க, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம். வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்களால் சொந்தஊருக்குச் சென்று வாக்களிக்க முடியாததும் வாக்குப்பதிவு குறைய முக்கிய காரணம். தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகமாக இருந்தும், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்வது அதிகரித்துள்ளது. அதனால் நம் மாநிலத்திலேயே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய சிந்தனையுடன் புதியவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். நம்மை நாம்தான் ஆள வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களித்தேன். தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருந்தாலும், இப்போது அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. எங்கள்  கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள்கூட கஞ்சா பயன்படுத்துவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்திருக்கிறேன். இங்கு எல்லோருக்கும் எல்லாமும் போய்ச் சேருவதில்லை. சாமானியர்களால் எந்தத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

 Interesting facts about who the first generation voted for

பிரதீப்குமார் (பி.இ., மாணவர்): வாக்களிப்பது நமது கடமை என்பதால், முதல் தலைமுறை வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதில் யாரும் தலையிடக்கூடாது என்று என் பெற்றோரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன். பிறரை குற்றம் சொல்வதை விட, நான் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வதை வைத்து வாக்களித்தேன். இதுவரை மாறி மாறி ஆட்சியில் இருந்தவர்கள் எந்த வகையிலாவது மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருந்துள்ளனர். எனக்கு தேசியக் கட்சிகள் மீது பெரிதாக ஆர்வம் இல்லாததால், மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை யார் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை. அதனால் புதியவருக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பவித்ரா (பிகாம்., மாணவி): முதல்முறையாக ஓட்டு போட்டபோது நான் கொஞ்சம் பெரிய பொண்ணாகிட்டேன் என்றும், பொறுப்புமிக்க குடிமகள் ஆகிட்டேன் என்ற உணர்வும் ஏற்பட்டது. எனக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று யோசித்து வாக்களித்தேன். என்னைப்போன்ற இளம் தலைமுறையினருக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். ஒரே கல்வித் தகுதி இருந்தும் சிலருக்கு முன்னுரிமை கிடைக்கிறது. சிலர், சில காரணங்களால் ஒதுக்கப்படுகின்றனர். இப்படி எந்த விதமான மத, சாதி வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என்றுயோசித்து வாக்களித்தேன். சாதி, மத வேறுபாடுகளின்றி எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். தமிழக அரசின் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் திட்டங்கள் பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் இந்த அரசு உணவு கொடுப்பது பிடித்திருக்கிறது. நான் ஒருமாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

அக்ஷயா (பி.ஏ., தமிழ்): எனக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததில் இருந்தே முதன் முறையாக வாக்களிக்கப் போவதை எண்ணி ஆர்வமாக இருந்தேன். இந்த நாட்டுக்கு பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இதுவரை ஆட்சியில் இருக்கும் கட்சிக்குதான் வாக்களித்தேன். அவர்களை ஆதரிப்பதன் மூலம் மேலும் நல்ல திட்டங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். பெண்களுக்கு இலவச பஸ், மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவது மேற்படிப்புக்கு உதவியாக இருக்கிறது. தமிழக அரசு, பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது. பெண்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதைவரவேற்கிறேன். இதை பிச்சை என்று சிலர் விமர்சிப்பதை ஏற்க முடியாது. நாம் யாரை தேர்ந்தெடுத்தோமோ அவர்கள்தான் நமக்கு உரிமைத் தொகையாக தருகிறார்கள். அதை பிச்சை என்றுசொல்ல முடியாது.

 Interesting facts about who the first generation voted for

சுரேகா (பி.இ., மாணவி): முதல் முறையாக தேர்தலில் வாக்களித்தது மகிழ்ச்சியாக இருக்கு. மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி அம்மா சொன்னாங்க. அவர் சொன்ன கட்சிக்கே வாக்களித்தேன். மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இலவச பஸ் திட்டமும், மகளிருக்கு உரிமைத்தொகை திட்டமும் பிடிச்சிருக்கு. குறிப்பாக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

பூஜா மற்றும் ராகுல்: ராஜஸ்தான் மாநிலம்தான் எங்களுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டோம். நாங்கள் பிறந்தது, படித்தது எல்லாம் இங்குதான். எங்கள் மாநிலத்தை விட தமிழ்நாட்டு கலாச்சாரமும், உணவும் பிடித்திருக்கிறது. ஆனாலும் நாங்கள் தேசியக்கட்சிக்குதான் வாக்களித்தோம். இவ்வாறு இளம் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.