Skip to main content

கடவுள் முன் பிரச்சினை செய்பவர்களுக்கு கருவறையில் இடமில்லை! -தென்கலை வைணவர்கள் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம்!

Published on 25/01/2020 | Edited on 25/01/2020

கடவுள் முன் பிரச்சினை செய்பவர்களுக்கு கருவறையில் இடமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோவில் பிரச்சினை தொடர்பாக தென்கலைப் பிரிவினர் தொடர்ந்த வழக்கில், வடகலை வைணவர்கள், காவல் துறை, கோவில் செயல் அதிகாரி ஆகியோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

 

highcourt

 



காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோவிலில் ஆழ்வார்கள் தமிழில் எழுதிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தைப் பாடவேண்டும் என, தென்கலை வைணவர்களும், சமஸ்கிருத வேதங்களைப் பாராயணம் செய்ய வேண்டும் என வடகலை வைணவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இதுசம்பந்தமாக இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக, இரு தரப்பினரையும் தலா 25 ஆயிரம் ரூபாய்க்கு பிணையப் பத்திரம் செலுத்த வேண்டும் என, காஞ்சிபுரம் சப் கலெக்டர்  உத்தரவிட்டார். 

இந்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி, தென்கலை வைணவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், சப் கலெக்டரின் உத்தரவால் இரு தரப்பினரும், பிரபந்தம் பாடுவதிலும், வேத பாராயணம் செய்வதிலும் எந்த பாதிப்பும் இல்லை எனக் குறிப்பிட்டார்.

யார் பெரியவர் என இரு தரப்பினரும் காட்டிக் கொள்வதால் பக்தர்கள் அசவுகர்யத்துக்கு ஆளாவதாகச் சுட்டிக் காட்டிய நீதிபதி, கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு கருவறையில் இடமில்லை எனக் கூறி, மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, வடகலை வைணவர்களுக்கும், விஷ்ணு காஞ்சி காவல் ஆய்வாளருக்கும், தேவராஜ ஸ்வாமி கோவில் செயல் அதிகாரிக்கும் உத்தரவிட்டார். 
 

சார்ந்த செய்திகள்