
சென்னை மற்றும் கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த மாதம் 6ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாகச் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும், அதேபோல் அரக்கோணம் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான நிறுவனத்திலும் அமலாக்கத்துறை சார்பில் சோதனை நடைபெற்றது. இதையடுத்து இந்த சோதனையின் மூலம் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.
இது தமிழக அரசியலில் புயலை கிளப்பிய நிலையில் எதிர்க்கட்சியினர் அரசுக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்தனர். அமலாக்கத்துறை விசாரணையை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 20/03/2025 அன்று நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், செந்தில்குமார் அடங்கிய அமர்வதற்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நடத்தப்பட்ட சோதனை சம்பந்தமாக அமலாக்கத்துறை மார்ச் 25 க்குள் பதிலளிக்க வேண்டும். அதுவரை இதில் எந்த ஒரு மேல் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
ஆனால் அடுத்த விசாரணைக்கு வருவதற்குள்ளாகவே கடந்த 25/03/2025 அன்று காலையே நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ்,செந்தில்குமார் ஆகியோர் டாஸ்மாக் வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். விலகலுக்கான காரணங்கள் எதையும் குறிப்பிடவில்லை. வழக்கு ஆவணங்களைத் தலைமை நீதிபதிக்கு அனுப்பி இருப்பதாக தெரிவித்த நீதிபதிகள், தலைமை நீதிபதி இந்த வழக்கை யார் விசாரிப்பது என முடிவெடுப்பார் என தெரிவித்திருந்தனர். டாஸ்மாக் முறைகேடு வழக்கில் நீதிபதிகள் திடீரென விலகியது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம் சுப்ரமணியன், ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்குத் தொடர்பான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், 60 மணி நேரம் சோதனை நடத்தி பெண் அதிகாரிகளை நள்ளிரவு வரை சிறை பிடித்துள்ளனர். இது மனித உரிமை மீறல். அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவுக்கு பதில் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தமிழகக் காவல்துறை சோதனை நடத்தியது இல்லையா? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு நள்ளிரவில் சோதனை நடத்தியதில்லை எனத் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பதில் அளித்தார். மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், தமிழக அரசின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், அமலாக்கத்துறை பதில் மனுவுக்கு பதில் அளிக்கத் தமிழக அரசுக்கு அனுமதி அளித்து, வழக்கு விசாரணையை ஏப்ரல் 8ம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்