
சென்னை மற்றும் கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த மாதம் 6ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாகச் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும், அதேபோல் அரக்கோணம் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான நிறுவனத்திலும் அமலாக்கத்துறை சார்பில் சோதனை நடைபெற்றது. இதையடுத்து இந்த சோதனையின் மூலம் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.
இது தமிழக அரசியலில் புயலை கிளப்பிய நிலையில் எதிர்க்கட்சியினர் அரசுக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்தனர். அமலாக்கத்துறை விசாரணையை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 20/03/2025 அன்று நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், செந்தில்குமார் அடங்கிய அமர்வதற்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நடத்தப்பட்ட சோதனை சம்பந்தமாக அமலாக்கத்துறை மார்ச் 25 க்குள் பதிலளிக்க வேண்டும். அதுவரை இதில் எந்த ஒரு மேல் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
ஆனால் அடுத்த விசாரணைக்கு வருவதற்குள்ளாகவே கடந்த 25/03/2025 அன்று காலையே நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ்,செந்தில்குமார் ஆகியோர் டாஸ்மாக் வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். விலகலுக்கான காரணங்கள் எதையும் குறிப்பிடவில்லை. வழக்கு ஆவணங்களை தலைமை நீதிபதிக்கு அனுப்பி இருப்பதாக தெரிவித்த நீதிபதிகள், தலைமை நீதிபதி இந்த வழக்கை யார் விசாரிப்பது என முடிவெடுப்பார் என தெரிவித்திருந்தனர். டாஸ்மாக் முறைகேடு வழக்கில் நீதிபதிகள் திடீரென விலகியது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதியின் ஒப்புதலுடன் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன் மற்றும் ராஜசேகர் அடங்கிய புதிய நீதிபதிகள் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முரளிதரன் என்பவரும், பாஜக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த மோகன்தாஸ் என்பவரும் இடையீட்டு மனுவை தாக்கல் செய்தனர். அமலாக்கத்துறை தரப்பில் பதில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
அமலாக்கத்துறையின் பதில் மனுவில் 'டாஸ்மாக் முறைகேடு வழக்கில் சட்டப்பூர்வ விசாரணையை சீர்குலைக்கும் வகையில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல. எனவே இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். சோதனைக்காக வாரண்டை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. அமலாக்கத்துறையிடம் முறையிட வாய்ப்பு இருந்தும் நேரடியாக ஐகோர்ட்டை நாடியது தவறு. சோதனையின் போது அதிகாரிகள் உணவு அருந்த, ஓய்வெடுக்க அனுமதி வழங்கிய பிறகே வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டது. பெண் அதிகாரிகள் பாதுகாப்பான முறையில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்' என தெரிவிக்கப்பட்டது.
இதில் தமிழக அரசு தரப்பில் அஜரான வழக்கறிஞர் 'அமலாக்கத்துறையின் பதில் மனுவிற்கு பதில் அளிப்பதற்கு கால அவகாசம் வேண்டும். சுமார் 60 மணி நேரம் சோதனை நடத்தி உள்ளார்கள். பெண் அதிகாரிகளை நள்ளிரவு வரை சிறை பிடித்துள்ளார்கள். இது மனித உரிமை மீறல்' என்ற வாதத்தை வைத்தார். அப்பொழுது குறுக்கிட்ட நீதிபதிகள், ஏன் தமிழக காவல்துறை இதுபோன்ற சோதனைகளை நடத்தியது இல்லையா? என கேள்வி எழுப்பிதோடு, 'அரசு என்பது ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என்றனர். மத்திய அரசு தரப்பில் டெல்லியில் இருந்து ஆஜராகிய வழக்கறிஞர் 'தமிழக அரசின் இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல' என வாதிட்டார்.
அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கி, வழக்கின் அடுத்த விசாரணையை ஏப்ரல் எட்டாம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
வரும் ஏப்ரல் எட்டு மற்றும் ஒன்பதாம் தேதியில் டாஸ்மாக் முறைகேடு வழக்கில் இறுதி விசாரணை நடைபெறும். எனவே இரண்டு தரப்பு வாதங்களையும் நிறைவு செய்ய வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.