
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன்(26). கட்டட மேஸ்திரியான இவருக்கும், இவரது உறவினர் பெண்ணுக்கும் கடந்த 23ஆம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில் திருமணம் முடிந்து மூன்றாவது நாளே குமரேசன் தனது நிலத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனையடுத்து வெள்ளிமேடு பேட்டை காவல்துறையினர் குமரேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், குமரேசன் ஏற்கனவே அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. இதையடுத்து இரு வீட்டாரும் பேசி குமரேசனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் கடந்த 23ம் தேதி திருமணம் செய்துவைக்க முடிவு செய்து, ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்நிலையில், அந்தப் பெண் வேறு ஒரு இளைஞருடன் 21ம் தேதி மாயமானார். அதனைத் தொடர்ந்து குமரேசனுக்கு முடிவு செய்யப்பட்ட 23ம் தேதி அவரது உறவினர் பெண்ணுடன் திருமணம் நடத்திவைத்தனர்.
இந்த நிலையில், காதலியின் பிரிவை தாங்கிக்கொள்ள முடியாமல் குமரேசன் திருமணம் நடந்த மூன்றாம் நாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.