குடியரசு மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது நடைமுறையான ஒன்று. வரும் ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் தேநீர் விருந்து அளிக்க உள்ளார்.
ஆளுநர் கொடுக்கவிருக்கும் தேநீர் விருந்தை திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி புறக்கணிப்பதாக தற்பொழுது அறிவித்திருந்தது. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'சட்ட மசோதாக்களை நிறைவேற்றாமல் ஆளுநர் ரவி காலம் தாழ்த்தி வருகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் தமிழர் நலனுக்கும் எதிராக ஆளுநர் செயல்படுகிறார். ஆளுநரின் செயல்பாடுகளை கண்டிக்கும் வகையில் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்' என தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து ஆளுநர் கொடுக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணியில் உள்ள விசிகவும், சிபிஎம் கட்சியும் அறிவித்திருந்தது. தொடர்ந்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கும் ஆளுநர் மாளிகை அழைப்பு விடுத்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்பது அல்லது புறக்கணிப்பது என எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் ஆளுநர் கொடுக்கும் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் தமிழக அரசு சார்பில் ஆளுநர் கொடுக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.