Skip to main content

“பள்ளி தொடங்கிய ஒரு வாரத்திலேயே அரசின் இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்” - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி

Published on 29/05/2023 | Edited on 29/05/2023

 

nn

 

திண்டுக்கல் மாநகரில் உள்ள பழனி ரோட்டில் இருக்கும் பாடநூல் கழக கிடங்கில் பாடநூல் புத்தகங்கள் பள்ளிக்கு அனுப்பும் பணியை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் பாடநூல் கழகத் தலைவர் ஐ.லியோனி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

 

அதன் பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, ''தமிழகத்தில் பள்ளிகள் தொடங்கிய ஒரு வாரத்திலேயே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்குப் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். புத்தகங்கள் மட்டுமின்றி கல்வி உபகரணங்களையும் மாணவர்களுக்கு வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார். பாடநூல்களைப் பொறுத்தவரையில் தட்டுப்பாடு என்பது கிடையாது. அனைவருக்கும் அரசின் இலவசப் புத்தகங்கள் கிடைக்கும்.

 

தேனி மாவட்டத்தில் சுற்றி வரும் அரிக்கொம்பன் யானையைப் பிடிக்க வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தொடர்ந்து யானை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். விரைவில் அதற்கு மயக்க ஊசி செலுத்திப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்று கூறினார்.

 

தொடர்ந்து பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி பேசுகையில், ''தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய மூன்று கோடியே 56 லட்சம் புத்தகங்கள் தயார் நிலையில் அனுப்பப்பட்டு விட்டன. மேலும் இலவச பாடப்புத்தகங்களுடன் 11 கல்வி உபகரணங்கள் வழங்கப்படும். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் தொடங்கி வைப்பார். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தற்போது பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன. குறிப்பாக ஆறாம் வகுப்பு முதல் +2 வரை அரசுப் பள்ளிகள் படித்தால் அவர்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்வியில் 7.5% இட ஒதுக்கீடு கிடைக்கும்.

 

மேலும் கல்லூரிகள் சேரும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க முன்வர வேண்டும். நடப்பு கல்வி ஆண்டு முதல் ஒன்பதாம் வகுப்பு பாடத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் திராவிட மொழிக் குடும்பம் என்ற பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டு கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது முழுமையான வாழ்க்கை வரலாறு பாடத்தைச் சேர்க்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். அவர் தமிழக முதல்வரிடம் அனுமதி பெற்று அதற்கான உத்தரவை வழங்குவார்'' என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்