Skip to main content

திறந்தவெளிகளில் கொட்டப்படும் குப்பைகள் மற்றும் மருத்துவக் கழிவுகள்... மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை!! 

Published on 16/06/2021 | Edited on 16/06/2021

 

Garbage and medical waste dumped in the open ... Pollution Control Board Warning

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த வேடப்பர் கோவிலில் இருந்து கருவேப்பிலங்குறிச்சி வரை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு அரசு காப்புக் காடுகள் அமைந்துள்ளன. இந்தக் காப்புக்காடு பகுதியில், நகரப் பகுதியில் இருந்து கொண்டுவரப்படும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. மேலும், காப்புக்காட்டில் உள்ள மரக்கிளைகளில் கரோனா வார்டுகளில் பயன்படுத்தப்படும் முழு கவச உடைகள், முகக் கவசங்கள் ஆகியன தொங்கிக்கொண்டிருக்கின்றன. மேலும் சில இடங்களில் மருத்துவக் கழிவுகள் குவியல் குவியலாக கிடக்கின்றன. 

 

அத்துடன் ப்ளாஸ்டிக் கழிவுகள், படுக்கை விரிப்புகள், தலையணை மற்றும் இறைச்சிக் கழிவுகள் ஆகியவை கொட்டப்படுகின்றன. அதுமட்டுமின்றி விருத்தாச்சலம் நகரக் குடியிருப்பு பகுதியில் அள்ளப்படும் கழிவுகள் காப்புக்காடு அருகே சாலை ஓரங்களில் கொட்டப்படுகின்றன. இதனால் காப்புக்காட்டில் வசிக்கும் குரங்கு, மான், மயில் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு நோய்த் தொற்று பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சிலர் மருத்துவக் கழிவுகளையும், குப்பைகளையும் தீவைத்து எரித்துச் செல்வதால், அந்தப் பகுதியே புகை மண்டலமாக மாறி காற்று மாசுபாடும், சாலை விபத்துகளும் ஏற்படுகின்றன.  

 

Garbage and medical waste dumped in the open ... Pollution Control Board Warning

 

மேலும், கடந்த சில மாதங்களாக குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் ஆங்காங்கே கொட்டப்படுகின்றன. திறந்தவெளியில் குப்பைகளும், மருத்துவக் கழிவுகளும் கொட்டப்படுவதால் நோய்த் தொற்று பரவும் என்று மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். எனவே குப்பைகளையும் மருத்துவக் கழிவுகளையும் திறந்தவெளியில் கொட்டுவதைத் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துவருகின்றனர். இதனிடையே மருத்துவக் கழிவுகளைத் திறந்தவெளியில் கொட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  

 

இதுகுறித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விடுத்துள்ள அறிக்கையில், “சுற்றுச்சூழல், வனம் மற்றும் சூழல் மாறுபாடு அமைச்சகம் மருத்துவக் கழிவுகளை முறையாக சேகரித்து, சுத்திகரித்து அகற்றுவதற்காக மருத்துவக் கழிவுகள் மேலாண்மை விதிகள் 2016 அறிக்கை செய்துள்ளது. இவ்விதிகளைப் பின்பற்றுவதன் மூலம் மருத்துவக் கழிவுகள் உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தையும் குறைக்க இயலும். மருத்துவமனைகளில் இருந்து உருவாகும் மருத்துவக் கழிவுகளை முறையாக பிரித்து, சேமித்து பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் சுத்திகரிப்பு செய்வதற்காக ஒப்படைக்க வேண்டும். மேலும் தொற்று ஏற்படுத்தக்கூடிய மருத்துவக் கழிவுகளை 48 மணி நேரத்திற்கு மிகாமல் சேமித்தல் கூடாது. 

 

Garbage and medical waste dumped in the open ... Pollution Control Board Warning

 

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மருத்துவக் கழிவுகளை முறையாக கையாள்வதற்காக அனைத்து மருத்துவமனைகள், உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத்துறை மற்றும் தொடர்புடைய துறைகளுக்கு ஏற்கனவே பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இருப்பினும் சாலைகள், ஆற்றங்கரைகள்,  நீர்நிலைகள் மற்றும் ஒதுங்கிய பகுதிகளில் மருத்துவக் கழிவுகளை சட்டவிரோதமாக கொட்டுவது தொடர்பாக பல்வேறு புகார்கள் தொடர்ந்து பெறப்படுகின்றன. தற்போது நிலவும் கோவிட்-19 நோய்த் தொற்று சூழலில் மருத்துவக் கழிவுகளை முறை இல்லாமல் திறந்தவெளியில் கொட்டுவது பொது சுகாதார மற்றும் சுற்றுச்சூழலுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். 

 

எனவே அனைத்து மருத்துவமனைகள், கோவிட்-19 பராமரிப்பு மையங்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்கள் ஆகியவற்றில் மருத்துவக் கழிவுகளை முறையாக சேமித்து, அந்தந்தப் பகுதியில் மாசுக் கட்டுப்பாடு வாரியம் அனுமதித்துள்ள பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும். மேலும், அங்கீகரிக்கப்படாத முறையில் மருத்துவக் கழிவுகளை அகற்றுவதைத் தவிர்க்க உறுதிசெய்ய வேண்டும். விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.