
சமீப காலமாக திருச்சி விமானத்தில் தங்கம் கடத்தி வருபவா்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. தினமும் திருச்சி விமான நிலையத்தில் நடைபெறும் பயணிகள் சோதனையில் தங்கம் கடத்தி வருவதை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனா். இருப்பினும் அதனைத் தடுக்க முடியவில்லை.
நேற்று (17.02.2021) இரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானப் பயணிகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது, 3 பயணிகள் அதிகமாக தங்கம் வைத்திருப்பதை அறிந்தனர்.
அதில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த கலீல் ரகுமான், காரைக்காலைச் சேர்ந்த மாலினி மற்றும் ரகுமான் ஆகிய 3 பயணிகள் தங்கள் உடைமைகளில் 2,930 கிராம் எடை கொண்ட தங்க நகைகளை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அதனுடைய மதிப்பு ஒரு கோடியே 43 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து நகைகளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவர்கள் மூவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.