![Four Youth arrested who cut the cake](http://image.nakkheeran.in/cdn/farfuture/ik2ae0k56oV7Yc-wPBMsf3yt-sPxzYTYsvwaqkh45Cg/1659326486/sites/default/files/inline-images/th_2942.jpg)
வீச்சரிவாள் வடிவம் கொண்ட கேக்கை பேருந்து நிறுத்தத்தில் வெட்டிய இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே பேரளம் பேருந்து நிறுத்தத்தில் பேரளம் வாய்க்கால் தெரு பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் மாதவன் என்பவனின் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடிட அவரது நண்பர்கள் முடிவெடுத்தனர். அதன்படி பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு இடையூறாக அரிவாள் வடிவம் கொண்ட கேக்கை தயாரித்து வாங்கிவந்து பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்கள் முகம் சுளிக்கும்படி கேக்கை வெட்டி கொண்டாடினர்.
இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து பேரளம் போலீஸார் பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக கேக் வெட்டிய அஜய் குமார் 27, மணிகண்டன் 19, விஷ்ணு 19, பிரசாத் 26, ஆகிய நான்கு பேரை கைது செய்துள்ளனர். மேலும் பர்த்டே பாய் மாதவன் மற்றும் மோகன்ராஜ் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.