பெரம்பலூரில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை கொடூரமாகத் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்த நிலையில், பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாவலர் கிராமத்தில் வசித்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை நான்கு பேர் கொலை வெறித்தனமாக தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. அதில் மனநலம் பாதிக்கப்பட்ட அந்த நபர் அலறி துடித்து அடிக்க வேண்டாம் என கெஞ்சும் நிலையில் சிலர் கொடூரத் தாக்குதல் நடத்தும் காட்சிகள் பார்ப்போரை கலங்க வைத்தது.
இந்த வீடியோ வைரலான நிலையில் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேபகுதியைச் சேர்ந்த முருகவேல், அருண், நிகாஷ், ரஞ்சித் ஆகிய நான்கு பேர் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை கொடூரமாக தாக்கியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதில் முக்கிய நபராக கருதப்படும் முருகவேலை போலீசார் கைது செய்துள்ள நிலையில், மற்ற மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர். நான்கு பேரும் மதுபோதையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை தாக்கியது தெரியவந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் அரிசியைத் திருட முயன்றதாக மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தகுந்தது.
மனநலம் பாதிக்கப்பட்ட நபர் மீது கொடூர தாக்குதல்; பதறவைக்கும் வீடியோ காட்சிகள்
சார்ந்த செய்திகள்
Next Story
அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை; சேலத்தில் பரபரப்பு
சேலத்தில் அதிமுக பிரமுகர் இரவில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
சேலம் கொண்டலாம்பட்டி அதிமுக செயலாளர் சண்முகம். இவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் சஞ்சீவிராயன் பேட்டை மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் திடீரென அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதிர்ச்சிக்குள்ளான அக்கம் பக்கத்தினர் மற்றும் அதிமுகவினர் நிகழ்விடத்திற்கு வந்தனர்.
காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த சண்முகத்தின் குடும்பத்தினர் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை கைது செய்யும் வரை சடலத்தை எடுக்கக் கூடாது என அங்கிருந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் உடலை மீட்ட போலீசார் சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த சண்முகம் 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத் தலைவராக பதவி வகித்துள்ளார். ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களிலும் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். கொலைக்கான காரணம் முன்விரோதமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தொடர்பாக மோப்ப நாயுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே கடலூரில் அதிமுக நிர்வாகி ஒருவர் திருட்டு ஆடுகள் வாங்கியதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது சேலத்தில் அதிமுக நிர்வாகி ஒருவர் மர்ம நபர்களால் சாலையிலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Next Story
அடிக்கடி தலைதூக்கும் அரிவாள் கலாச்சாரம்-தலைகவிழ்ந்தே கிடக்கும் கண்காணிப்பு கேமராக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரில் அடிக்கடி சிலர் கஞ்சா போன்ற மாற்றுப் போதையில் அரிவாளைத் தூக்கிக்கொண்டு கடைவீதியில் சுற்றுவதும், கடைகளை உடைப்பதும், கடையில் உள்ளவர்களை தாக்குவதும் வாடிக்கையாகிக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க முடியாமல் தடுமாறும் நிலைதான் ஏற்பட்டுள்ளது. இதனால் வணிகர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் திக் திக் மனநிலையிலேயே கடைவீதிக்கு வந்து செல்கின்றனர்.
இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலர் அரிவாளோடு வந்து பல கடைகளையும், ஏடிஎம் கதவுகளையும் அடித்து உடைத்துச் சென்றுள்ளனர். அவர்களை ஆலங்குடி போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் சம்பவம் நடந்த கடைகள் முதல் பலரும் ரவுடிகளுக்கு பயந்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவு இல்லை என்று சொல்லி விட்டனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு இதுபோன்ற செயல்களை தடுக்க அப்போதைய ஆலங்குடி காவல் ஆய்வாளர் பன்னீர்செல்வம் (தற்போது டி.எஸ்.பி), போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் வீரமணி (தற்போது திருச்சி ராம்ஜி நகர் ஆய்வாளர்) ஆகியோர் ஆலங்குடி பேருந்து நிலையம், அரசமரம், வடகாடு முக்கம், பேரூராட்சி முக்கம், பாத்தம்பட்டி முக்கம், சந்தைப்பேட்டை என பல இடங்களிலும் 15 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த காவல்நிலையத்தில் தனியறையில் பெரிய டிவியில் ஓடவிட்டு கண்காணித்து வந்தனர். இதனால் அந்த சில ஆண்டுகள் இதுபோன்ற அரிவாள் கலாச்சாரம் ஓய்ந்திருந்தது. வணிகர்களும், பொதுமக்களும் நிம்மதியடைந்திருந்தனர். அதேபோல் போக்குவரத்தை சரி செய்ய சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்த கயிறு அடித்தும் பல இடங்களில் கார்டுலெஸ் ஸ்பீக்கர்கள் வைத்தும் போக்குவரத்து சரி செய்யப்பட்டதால் போக்குவரத்தும் சீராக இருந்தது விபத்துகளும் தடுக்கப்பட்டது.
ஆனால் அந்த சில ஆண்டுகளுக்கு பிறகு ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து பல பிரச்சனைகள் நடந்து கொண்டுதான் உள்ளது. அதேநேரத்தில் முன்பு அமைக்கப்பட்ட அத்தனை கேமராக்களும் நகரில் நடக்கும் அட்டூழியங்களைப் பார்த்து தலைகுனிந்து கிடக்கிறது. நகர மக்களையும், வணிகர்களையும் காக்க பேரூராட்சி நிர்வாகமோ, காவல் நிர்வாகமோ அந்தக் கேமராக்களை சரி செய்ய நினைக்கவில்லை. இந்த கேமராக்கள் சரி செய்து இயங்கத் தொடங்கினாலே பல குற்றச்செயல்களை தடுக்க முடியும் வணிகர்களும், பொதுமக்களும் அச்சமின்றி இருப்பார்கள். மேலும் இந்த கேமராக்கள் சரி செய்யப்படால் வெளியூர்களில் இருந்து தப்பிவரும் குற்றவாளிகளைக் எளிமையாக அடையாளம் காண ஏதுவாக இருக்கும் என்கின்றனர் மக்கள்.