ஈரோடு பெரியவலசு பகுதியைச் சேர்ந்த மூதாட்டி சொர்ணா(80) என்பவர் கடந்த மாதம் 27ஆம் தேதி வேலை நிமிர்த்தமாக சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த போது, விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து அவரது மகள் வளர்மதி உதவியுடன், ஈரோடு அரசு தலைமை மருத்துவனைக்கு மூதாட்டி சொர்ணா வந்துள்ளார். அப்போது, நடக்க முடியாமல் இருந்த மூதாட்டி சொர்ணாவை அழைத்து செல்ல மருத்துவ ஊழியர்கள் ஸ்ட்ரெச்சர் வழங்காததால், அவரது மகள் வளர்மதி தாயைத் தூக்கி சென்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், அரசு மருத்துவமனை சுகாதார இணை இயக்குநர் அம்பிகா சண்முகம் விசாரணை மேற்கொண்டார். கடந்த 16 நாட்களாக நடைபெற்று வந்த இந்த விசாரணையின் இறுதியில், சம்பவத்தன்று பணியில் இருந்த மருத்துவமனை பணியாளர் பிரகாஷ் மற்றும் முத்துசாமி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்படுள்ளனர்.
மேலும் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றி வந்த பணியாளர் மைதிலி என்பவர் பவானி அரசு மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனை பணியாளர்கள் முத்துச்சாமி மற்றும் பிரகாஷை பணிநீக்கம் செய்வதற்கு, மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்துள்ளதாக, அரசு மருத்துவமனை சுகாதாரத்துறை இணை இயக்குனர் அம்பிகா சண்முகம் தகவல் தெரிவித்துள்ளார்