Skip to main content

எடப்பாடி என்ன வெள்ளைக்கார துரையா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Published on 20/11/2018 | Edited on 20/11/2018
edappadi palanisamy



டெல்டாவில் மக்களை சந்திக்க மறுத்த எடப்பாடி பழனிசாமி என்ன வெள்ளைக்கார துரையா என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

காவிரி பாசன மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காகச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் இரு இடங்களில் மட்டும் நிவாரண உதவி வழங்கி விட்டு திரும்பியிருக்கிறார். கடுமையான சேதமடைந்த பிற பகுதிகளை பார்க்காமல் ஏதோ சுற்றுலாவுக்கு சென்றதைப் போன்று முதலமைச்சர் திரும்பியிருப்பது கண்டிக்கத்தக்கது.
 

கஜா புயலால் சூறையாடப்பட்ட காவிரி பாசன மாவட்டங்கள் சின்னாப்பின்னமாகியுள்ளன. தஞ்சாவூர், நாகப்பட்டினர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும், அவற்றையொட்டிய புதுக்கோட்டை மாவட்டத்திலும் மிகக்கடுமையான பாதிப்புகளும் சேதங்களும் ஏற்பட்டுள்ளன. கஜா புயல் தாக்கி 5 நாட்கள் ஆகியும்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் சரிவர உணவு வழங்கப்படவில்லை. சுனாமித் தாக்குதலுக்குப் பிறகு மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள காவிரி பாசன மாவட்டங்களுக்கு முதல் ஆளாக சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட வேண்டியவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தான். ஆனால், புயல் தாக்கி 100 மணி நேரத்திற்கு பிறகு ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை மாவட்டம் மாப்பிள்ளையார்குப்பம், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த சூரப்பள்ளம் ஆகிய இடங்களுக்கு சென்ற முதலமைச்சர், அங்கு அமைக்கப்பட்டிருந்த மிகக்கடுமையான பாதுகாப்பு வளையத்திற்குள் நின்றவாறு சிலருக்கு மட்டும் நிவாரண உதவிகளை வழங்கி விட்டு திரும்பியுள்ளார்.
 

முதலமைச்சர் நிவாரண உதவி வழங்கும் படத்தைப் பார்த்தாலே உண்மை விளங்கும். முதலமைச்சருக்கு அருகில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், அடுத்த வளையத்தில் காவல்துறை உயரதிகாரிகள், மூன்றாவது வளையத்தில் காவல்துறையின் தடுப்புத் தட்டிகள், அதற்குபின் ஆயிரக்கணக்கில் காவலர்கள், முதலமைச்சரிடம் நிவாரண உதவி வாங்குவதற்காக அழைத்து வரப்பட்ட சில மக்கள் தவிர கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை மக்களையே பார்க்க முடியவில்லை. முதலமைச்சர் வந்திருப்பதை அறிந்து அவரிடம் மனு கொடுப்பதற்காக வந்த மக்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். தமது பயணத்தில் மக்களை சந்திக்காமல் அதிகாரிகளையும், அதிமுகவினரையும் மட்டுமே சந்தித்து திரும்பியுள்ளார் முதலமைச்சர்.

 

anbumani ramadoss


அதன்பின் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வேதாரண்யம், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளை பார்க்காமல், மழையை காரணம் காட்டி திருச்சி திரும்பிய முதலமைச்சர் அங்கு ஓய்வெடுத்து  மகிழ்ந்துள்ளார். மழை குறைந்தபின் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்க்க முயலாமல் சென்னைக்கு திரும்பியுள்ளார். பாதிக்கப்ப்பட்ட மக்களை சந்தித்து மனுக்களைப் பெறவும், மிக மோசமான பாதிப்புகளை சந்தித்த பகுதிகளுக்கு செல்ல முதலமைச்சர் மறுத்திருப்பதும் அவரது ஆணவத்தையும், அதிகாரச் செருக்கையும்  தான் காட்டுகின்றன. முதலமைச்சர் நினைத்திருந்தால் உலங்கு ஊர்தி செல்ல முடியாத இடங்களுக்குக் கூட மகிழுந்தில் சென்று பார்த்திருக்க முடியும். பட்டுக்கோட்டையிலிருந்து திருச்சிக்கு ஹெலிகாப்டரில் திரும்புவதற்குள் மகிழுந்தில் மன்னார்குடிக்கும், வேதாரண்யத்திற்கும் சென்றிருக்க முடியும். ஆனால்,  அப்படிச் செல்வதற்கு,‘மருமகனே வருக’ என்று பதாகை அமைத்து அழைத்து பிரியாணி விருந்து படைக்கும் மாமியார் ஊர் இல்லையே? அதனால் தான் அவர் அங்கு செல்லாமல் புறக்கணித்திருக்கிறார்.
 

அதிகாரிகளும், காவலர்களும் புடைசூழ ஆடம்பர மகிழுந்தில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட முதலமைச்சருக்கு சிரமமாக இருந்தால், கொட்டும் மழையில் குடியிருக்க வீடும், உணவும் இல்லாமல், சொந்த ஊர்களிலேயே அகதிகளைப் போலத் தவிக்கும் மக்களின் துயரம் எத்தகையதாக இருக்கும்? ஒட்டுமொத்த காவிரி பாசன மாவட்ட மக்களும் பேரிடரின் கொடுமைகளை அனுபவித்து வரும் நிலையில், மழையில் நனைய மாட்டேன், தரையில் கால் வைக்க மாட்டேன் என்றெல்லாம் பிடிவாதம் பிடிக்கும் எடப்பாடி பழனிச்சாமி எங்களின் பிரதிநிதியா.... அல்லது ஆங்கிலேயர் ஆட்சியில் அவர்களுக்கு கங்காணி வேலைப் பார்ப்பதற்காக நியமிக்கப்பட்ட வெள்ளைக்காரத் துரையா? என்று பாதிக்கப்பட்ட மக்கள் வினவுகின்றனர். இந்த வினாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி  பதிலளித்தே தீர வேண்டும்.
 

கன்னியாக்குமரியில் ஒக்கி புயல் தாக்கிய போது அங்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமி, பொதுமக்கள் அனைவரையும் கம்பித் தடுப்புகளுக்குள் சிறை வைத்து விட்டு 100 மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்து தான் ஒலிப்பெருக்கி மூலம் குறைகளை கேட்டார். இப்போது மக்களையே சந்திக்காமல் அவர் திரும்பியுள்ளார். இதற்காக அவருக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்பது உறுதி. இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“புதிய பேருந்துகளை அரசு வாங்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani Ramadoss says Government should buy new buses

புதிய அரசு பேருந்துகளையும், தமிழக அரசு வாங்க வேண்டும் என்றும், பழைய பேருந்துகளைப் பராமரிக்க, உதிரி பாகங்களை வாங்க அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துநர் தூக்கி வீசப்பட்டுள்ளார். பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதைத்  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே ஒப்புக் கொண்டிருக்கிறார். 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும், அவற்றைப் பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாதது தான் இத்தகைய அவல நிலை ஏற்படுவதற்கு காரணம் ஆகும். இத்தகைய அவல நிலைக்கு தி.மு.க தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள் கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள் ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள் வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

சீரழிவின் உச்சிக்கு செல்லும் தமிழ்நாடு- அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tamil Nadu on the verge of degradation- Anbumani Ramadoss condemned

சென்னை கண்ணகி நகர், சுனாமி நகர் குடியிருப்பு 64ஆவது பிளாக்கில் வசித்து வரும் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளவர் உமாபதி. இவர் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்ய முயன்ற போது போலீசாரை கற்களால் தாக்கிய சம்பவம் தொடர்பாக வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சென்னை கண்ணகி நகரில் உமாபதி என்ற கஞ்சா வணிகரை கைது செய்வதற்காக சென்ற இரு காவலர்களை கஞ்சா போதையில் இருந்த உமாபதியும், அவரது நண்பரும் இணைந்து கண்முடித்தனமாக தாக்கியதில் இரு காவலர்களும் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பெற்று வருகின்றனர்.

அதேபோல், கும்பகோணம் பாலக்கரையில் கஞ்சா போதையில் இருந்த 8 பேர் கொண்ட கும்பல் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துநரையும், அதை படம் பிடித்த இரு செய்தியாளர்களையும்  கொடூரமாகத் தாக்கியுள்ளனர். கஞ்சா அடிமைகளால் காவல்துறையினர்,  போக்குவரத்துத் தொழிலாளர்கள், செய்தியாளர்கள், பொதுமக்கள் என எந்தத் தரப்பினருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை  ஏற்பட்டிருப்பது பெரும் கவலையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.

கண்ணகி நகரைச்  சேர்ந்த உமாபதி கஞ்சா வணிகம் செய்வதையே முழு நேரத் தொழிலாகக் கொண்டவர். இதற்காக பல முறை கைது செய்யப்பட்ட போதிலும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு விடுவதால் அவருக்கு சட்டத்தின் மீது எந்த அச்சமும் இல்லை.  அவர் கஞ்சா வணிகம் செய்வது குறித்து காவல்துறையினருக்கு புகார் அளித்த இருவரைப் பற்றிய விவரங்களை காவல்துறையினரிடம் இருந்து பெற்ற உமாபதி அவர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளார். அவர்களும் ஆபத்தான நிலையில் மருத்துவம் பெற்று வருகின்றனர். இது குறித்த வழக்கில் கைது செய்யச் சென்ற போது தான் காவலர்களை அவர் தாக்கியுள்ளார்.

Tamil Nadu on the verge of degradation- Anbumani Ramadoss condemned

உமாபதி உள்ளிட்ட கஞ்சா வணிகர்கள், கஞ்சா போதைக்கு அடிமையானவர்களைக் கண்டு அஞ்சி நடுங்குவதாக கண்ணகி நகர் மக்கள் தெரிவித்துள்ளனர். கண்ணகி நகர் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் இதே நிலைதான் காணப்படுகிறது. மது போதையை கடந்து கஞ்சா போதைக்கு சிறுவர்கள் கூட அடிமையாகிக் கிடக்கின்றனர். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கூட கஞ்சா போதையில் செல்வதும், அதைக் கண்டித்து எச்சரிக்கும் ஆசிரியர்களைத் தாக்குவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.  கஞ்சா போதைக்கு செல்லாமல் இளைய தலைமுறையினரைத் தடுப்பதும், போதைக்கு அடிமையாவதைத் தடுப்பதும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.

சென்னை உட்பட  தமிழ்நாடு  முழுவதும் கஞ்சா, அபின், ஹெராயின், கோகைன், எல்எஸ்டி என, அனைத்து வகையான போதைப் பொருட்களும் கிடைக்கின்றன. 24 மணி நேரம் வரை போதையில் மிதக்க வைக்கும் போதைப்பொருட்கள் கூட சென்னையில் தாராளமாகக் கிடைக்கின்றன. தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டமும், கடத்தலும் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகின்றன. உலக அளவிலான போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தல் மையமாக தமிழகம் மாறி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டமும், பயன்பாடும் அதிகரித்து வருவது குறித்தும், அவற்றை ஒழிக்க வேண்டியதன் தேவை குறித்தும் பல ஆண்டுகளாகவே வலியுறுத்தி வருகிறேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த போதும் போதைப் பொருட்களை கட்டுப்படுத்தும்படி வலியுறுத்தினேன். ஆனால், போதைப் பொருட்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. அதன் விளைவு தான் தமிழகத்தில் போதைப்பொருட்கள் தலைவிரித்தாடுகின்றன.

தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரிக்கும் போதெல்லாம் கஞ்சா வேட்டை என்ற பெயரில் காவல்துறையினர் சில ஆயிரம் பேரை கைது செய்வார்கள். ஆனால், அடுத்த நாளே அவர்கள் வெளியில் வந்து மீண்டும் கஞ்சா வணிகத்தைத் தொடங்கி விடுவார்கள். ஆட்சியாளர்கள் மற்றும் காவல்துறையினரின் மறைமுக ஆதரவுடன் தான் தமிழ்நாட்டில் கஞ்சா வணிகம் நடைபெறுகிறது என்று வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டுகிறேன். தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படா விட்டால், இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என்பதே உண்மை.

தமிழ்நாடு இன்று எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்சனையே போதைப் பொருட்கள் நடமாட்டமும், அதனால் இளைஞர்கள் சீரழிவதும் தான். தமிழ்நாடு அரசு இனியாவது விழித்துக் கொண்டு போதைப் பொருட்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; தமிழகத்தை போதையில்லாத மாநிலமாக மாற்ற வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.