
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டில் அ.தி.மு.க. தலைமை நிலையச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரைக் கட்சியை விட்டு நீக்குவதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அந்த போஸ்டரில், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவால் கைகாட்டிய ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாக வத்தலக்குண்டு மக்கள். எடப்பாடி பழனிசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார், கே.பி. முனுசாமி ஆகியோர் அ.இ.அ.தி.மு.க.வின் தலைமை கழகத்தில் இருந்து நீக்கப்பட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து போஸ்டர் ஒட்டிய எம்.ஜி.ஆர். மன்ற ஒன்றிய நிர்வாகி செல்லத்துரையிடம் கூறுகையில், "அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ் இன்றளவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரைக் கட்சியை விட்டு நீக்கும் எண்ணத்தில் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். அதனால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனைவரையும் கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்து போஸ்டர் ஒட்டி தங்கள் கருத்தை வெளிப்படுத்தி இருப்பதாக கூறினார்.
வரும் ஜூலை 11- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள அ.தி.மு.க.வின் பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் நடந்து வரும் வேளையில், திண்டுக்கல் மாவட்டத்தில் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாக முதன்முறையாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.