Skip to main content

அதிகாலை என்கவுன்டர்; பரபரப்பில் தலைநகர்

Published on 14/07/2024 | Edited on 14/07/2024
Early morning encounter; The capital is in a frenzy

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது.

இது தொடர்பாக 11 பேர் சரணடைந்த நிலையில் 11 பேரும் கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடி காவலில் விசாரணைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

குற்றவாளிகளை தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் 7 நாட்கள் அனுமதி கேட்ட நிலையில், நீதிமன்றம் 5 நாள் விசாரணைக்கு அனுமதி வழங்கியது, இதையடுத்து காவல்துறையினர் 11 பேரையும் தங்களது விசாரணை வளையத்திற்குள் கொண்டு சென்று விசாரித்த போது, வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி பிரபல ரவுடி திருவேங்கடம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான திடுக்கிடும் தகவல்களையும்,  அதற்கான சதி திட்டம் தீட்டிய இடத்தில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ள குறித்தும்  தெரிவித்துள்ளான்.

இதனால் அவன் குறிப்பிட்ட புழல் வெஜிடேரியன் நகருக்கு அவனை இன்று அதிகாலை அழைத்துச் சென்று தடயங்கள் ஏதேனும் உள்ளதா ? என்பது குறித்து கண்டறிவதற்காக காவல்துறையினர் சென்றபோது, அவர்களின் பிடியில் இருந்து ரவுடி திருவேங்கடம் தப்பிச் சென்று, அப்பகுதியில் உள்ள இரும்பு தகடு மேய பட்ட சிறு கூரையின் உள்ளே பதுங்கிக் கொண்டு அங்கு மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் காவல்துறையினரை நோக்கி சுட்டுள்ளான். அப்போது சரணடையும்படி எச்சரிக்கை விடுத்தும் சரணடையாமல் வெளியே வர மறுத்து  தப்பி செல்ல திட்டம் தீட்டியதாக தெரிகிறது. இதனால் வேறு வழியின்றி காவல்துறையினர் ரவுடி திருவேங்கடத்தை இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டதில் மார்பிலும், வயிற்றிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் சுருண்டு விழுந்த அவனை மீட்டு மாதவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர்.

Early morning encounter; The capital is in a frenzy

அங்கு உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததை தொடர்ந்து ரவுடி திருவேங்கடத்தின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த புழல் காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி திருவேங்கடத்தின் உடல் வைக்கப்பட்டுள்ள ஸ்டான்லி மருத்துவமனைக்கு நீதிபதி ஒருவர் முன்பு உடற்கூறாய்வு நடைபெற உள்ளது.மேலும் என்கவுன்டர் நடைபெற்ற இடத்தில் காவல்துறை உயரதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்