Skip to main content

நீதி கிடைக்காத மரணம்! டிஎஸ்பி விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கை கைவிட்ட சி.பி.ஐ.!

Published on 07/05/2018 | Edited on 07/05/2018
DSP-Vishnu-priya



நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் டிஎஸ்பியாக முதல் பணி நியமனம் பெற்றவர் டிஎஸ்பி விஷ்ணுபிரியா. பணியில் சுறுசுறுப்பாகவும், நேர்மையாகவும் நடந்து கொண்டார் என்று சக போலீஸ்காரர்களே கூறி வந்தார்கள். இந்த நிலையில்தான் கோகுல்ராஜ் என்ற இளைஞர் 2015 ஜீன் 24 அன்று கொலை செய்யப்பட்டு ரயில்வே தண்டவாளத்தில் கிடந்தார். 
 

இந்த கோகுல்ராஜ் மற்றொரு பிரிவை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து, அதன் மூலமாக அச்சமூகத்தைச் சேர்ந்த சிலரால் கொலை செய்யப்பட்டார் என தெரிய வந்தது. கோகுல்ராஜ் கொலையில் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் யுவராஜ். இவர் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவராகவும் இருக்கிறார். கொலை சம்பவத்திற்கு பிறகு யுவராஜ் தலைமறைவானார். இந்த சாதி ஆணவ படுகொலையை விசாரித்த விசாரணை அதிகாரியாக இருந்தவர்தான் டிஎஸ்பி விஷ்ணுபிரியா. 

 

gokulraj

கோகுல்ராஜ்
 

இந்த கொலை வழக்கில் சிலர் கைது செய்யப்பட்டாலும் ஏ1 ஆன யுவராஜ் கைது செய்யப்படவில்லை. இதற்கு பலமுனைகளில் இருந்தும் போலீஸ் அதிகாரிகள் டிஎஸ்பி விஷ்ணுபிரியாவுக்கு மனஉளைச்சல் கொடுத்து வந்திருக்கிறார்கள். ஒருதரப்பு யுவராஜை கைது செய்யக்கூடாது என மிக கடுமையாகவே டிஎஸ்பியை நெருக்கியுள்ளது. சம்மந்தப்பட்ட யுவராஜ் பலமுறை டிஎஸ்பியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு மிரட்டலாகவும் பேசியிருக்கிறார். 
 

இந்த சூழ்நிலையில்தான் இந்த வழக்கை விசாரித்து வந்த விஷ்ணுபிரியா, அப்போது நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த செந்தில்குமார் இந்த வழக்கின் ஆவணங்களையெல்லாம் எடுத்துக்கொண்டு நாமக்கல் அலுவலகத்திற்கு வருமாறு உத்தரவிட்டிருந்தார். அதன் பின்னணியில்தான் செப்டம்பர் 18ஆம் தேதி மதியம் டிஎஸ்பி விஷ்ணபிரியா தனது முகாம் அலுவலகத்திலேயே தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்தார். 
 

இது கொலை என்றும், மர்ம மரணம் என்றும், மன உளைச்சலால் தற்கொலைக்கு தூண்டப்பட்டார் என்றும் அப்போது போலீசாரால் கூறப்பட்டது. முதலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க, அதன் பிறகு விஷ்ணுபிரியா தந்தை ரவி, உயர்நீதிமன்றத்தில் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மனு அளித்தார். அதன் அடிப்படையிலேயே சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

 

Yuvaraj

யுவராஜ்
 

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, விஷ்ணுபிரியா மரணம் தற்கொலைதான் என்றும், இந்த வழக்கை கைவிடுவதாக கோவை முதன்மை நீதிமன்றத்தில் மனு செய்துள்ளது. சிபிஐ தன்து விசாரணையை கைவிடுவதாக அறிவித்திருப்பது விஷ்ணுபிரியாவின் குடும்பத்தினருக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த போலீசாருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

நம்மிடம் பேசிய நாமக்கல் மாவட்ட போலீசார், சிபிஐ விசாரணையின்படி டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை என்று நாம் ஏற்றுக்கொண்டாலும், அவர் ஏன் தற்கொலை செய்தார். அவரை தற்கொலைக்கு தூண்டிய சக்தி எது. அதைப்பற்றி எந்த விசாரணையும் இல்லையே. டிஎஸ்பி விஷ்ணுபிரியா இறப்பதற்கு முன்பு 11 பக்கம் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் என்ன இருந்தது என்று இன்னமும் முழுமையாக தெரியவில்லை. அதுமட்டுமில்லாமல் அவரது லேப்டாப், மொமைல் போன் போன்றவற்றில் பலவற்றை பதிவு செய்து வைத்திருக்கிறார். அந்த பதிவும் இன்னும் வெளியிடப்படவில்லை. தற்கொலையே என்றாலும் நீதி வேண்டாமா என வேதனையோடு கூறினார்கள். 

சார்ந்த செய்திகள்

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'பிரதான தொழில் திமுகவால் நசிந்து நலிந்து வருகிறது'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
'The main industry is being destroyed by DMK'-Edappadi Palaniswami's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் நாமக்கலில் அதிமுக வேட்பாளர் தமிழ்மணியை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். கூட்டத்தில்  அவர் பேசுகையில், ''கைத்தொழில் நெசவாளர்கள் பாதிப்பாகாத வகையில் பார்த்துக் கொண்ட அரசு அதிமுக .அரசு ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த பலர் கைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். சங்ககிரி, திருச்செங்கோடு, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் விசைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. அந்தப் பகுதிகளில் நன்கு அறிமுகமானவன் நான். எல்லா இடத்திற்கும் நான் சென்று வந்திருக்கின்றேன். இந்த விசைத்தறி தொழில் ஒரு பிரதான தொழிலாக இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான பேர் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள்.

இன்றைக்கு அந்தத் தொழில் எல்லாம் நசுங்கி நலிவடைந்து வருகிறது. இந்தத் தொழில் சிறக்க ஏதாவது இந்த அரசு நடவடிக்கை வேண்டும் என குரல் கொடுத்தால், திமுக அரசு எதையுமே கண்டுகொள்ளாமல் இருக்கிறது. விலையில்லா வேட்டி, சேலைகள் அதிமுக ஆட்சிக் காலத்தில் உரிய நேரத்தில் இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு ஆர்டர் கொடுத்தோம். இதனால் அந்தத் தொழில் பாதுகாக்கப்பட்டது. ஆனால் 2021 சரியான ஆர்டர் கொடுக்கவில்லை. அதனால் வேலை வாய்ப்பை இழந்தார்கள். 2024ல் தரமான நூல் கொடுக்கவில்லை. அதனால் இப்பொழுது தொழில் சரிவை கண்டுள்ளது. ஆகவே அதிமுக ஆட்சி உங்கள் ஆதரவோடு மீண்டும் மலரும். அப்பொழுது இந்தத் தொழில் செழிக்கும். திமுகவின் பொம்மை முதலமைச்சர் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் வரை இப்படித்தான் இருக்கும். இதற்கெல்லாம் விடிவு காலம் வர வேண்டும் என்றால் மீண்டும் அதிமுக கட்சிக்கு வர வேண்டும். அப்பொழுதுதான் ஏழைகள் இல்லை என்ற சொல்லை உருவாக்க முடியும்''என்றார்.