புதுச்சேரி மாநிலம் பாகூர் அருகேயுள்ள சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றில் டிராக்டர், லாரி, மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளப்பட்டு வந்தது. அவர்களிடம் பணம் வசூலிப்பது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த இளங்கோ, கலியபெருமாள் ஆகியோர் இரண்டு குழுக்களாக செயல்பட்டு வந்தனர். அதனால் இரு தரப்பினரும் அடிக்கடி மோதலில் ஈடுபட்டனர்.

கடந்த 13.10.2009 அன்று நவாத்தோப்பு பகுதியில் இரு தரப்பினருக்கும் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். அதில் இரு தரப்பினரும் படுகாயம் அடைந்தனர். கலியபெருமாள் தரப்பை சேர்ந்த பரஞ்சோதி, ஞானபிரகாசம் ஆகிய இருவர் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த இரட்டை கொலை தொடர்பாக பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளங்கோ, ஆறுமுகம், ரகு, ராஜ்குமார், அய்யனார், வெற்றிவேல், சுகன், பெரியண்ணன், கவிராஜ் ஆகிய 9 பேரை கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை புதுவை இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சுபா அன்புமணி, குற்றவாளிகள் 9 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், தலா 16 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அதையடுத்து குற்றவாளிகள் 9 பேரையும் போலீசார் காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். அதேசமயம் எதிர்தரப்பை சேர்ந்த கலியபெருமாள், ராமமூர்த்தி, பூபதி, வேல்முருகன், முருகன் ஆகிய 5 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.