Skip to main content

என் எல்லைக்குள் வராதே!!! தடை போட்ட ராணிப்பேட்டை மாவட்டம்...

Published on 13/06/2020 | Edited on 13/06/2020
 Don't fall within my range ... Ranipettai district


தமிழகத்தில் வேகமாக கரோனா பரவி வருகிறது. இருந்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசும், மாநிலத்தை ஆளும் அதிமுக அரசும் அதனை கட்டுப்படுத்துவதில் சுணக்கமாகவே உள்ளன. அதோடு, அனைத்துவிதமாக தொழிற்சாலைகளையும் திறக்க அனுமதி அளித்துள்ளன.


அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து விதமான தொழிற்சாலைகளும் 100 சதவிதம் இயங்க தொடங்கியுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளுக்கு காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளுவர், வேலூர் போன்ற மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைக்கு செல்கின்றனர். இவர்களை அழைத்து செல்ல அந்த நிறுவனங்கள் பேருந்துகளை இயக்குகிறது.

வாகன போக்குவரத்தை பொருத்தவரை வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஒரு மண்டலம். அதேபோல் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி போன்றவை ஒரு மண்டலம். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஒரு மண்டலம், சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி மட்டும் ஒரு மண்டலம் என பிரிக்கப்பட்டுள்ளன. இதில் மண்டலங்களுக்குள் பேருந்துகள் உட்பட வாகனங்களை இயக்கிக்கொள்ளலாம். மற்றப்படி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வாகனங்களை இயக்கக்கூடாது என அரசு விதிமுறை வகுத்துள்ளது.

அதேபோல் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல வாகனங்களுக்கு எந்த தடையுமில்லை என அறிவித்தும் உள்ளது.

இந்நிலையில் சென்னையில் கரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் அங்கிருந்து ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சொந்த ஊரை நோக்கி பயணமாகின்றன. அப்படி வருபவர்களால் அந்தந்த மாவட்டங்களில் நோய் தொற்று உருவாகி எண்ணிக்கை அதிகரிக்கின்றன. இதனால் மாவட்ட நிர்வாகங்கள் தடுமாறத்துவங்கியுள்ளன. அதனை கவனத்தில் கொண்டு சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக வருபவர்களை தடுக்க துவங்கியுள்ளன மாவட்ட நிர்வாகங்கள்.

 

 

 Don't fall within my range ... Ranipettai district


செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு வருபவர்களை தீவிரமாக கண்காணிக்கிறது மாவட்ட காவல்துறை. இதற்காக மாவட்ட எல்லையிலேயே செக்போஸ்ட் அமைத்துள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் இருந்து யாராவது வந்தால் அவர்களை திருப்பி அனுப்புகிறது. இருசக்கர வாகனத்தில் வருபவர்களைகூட அனுமதிப்பதில்லை. அதேநேரத்தில் இ-பாஸ் வாங்கிக்கொண்டு வருபவர்களை எல்லையில் புதியதாக ஏற்பாடு செய்துள்ள தற்காலிக கரோனா இல்லத்தில் தங்கவைத்து அவர்களுக்கு பரிசோதனை செய்து, நெகட்டிவ் என வந்தால் மட்டுமே அனுப்ப உத்தரவிட்டுள்ளார் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்ஷினி.


காஞ்சிபுரம் மாவட்ட திருபெரும்புதூர் பகுதியில் இயங்கும் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பிரபல தனியார் நிறுவனம், நிறுவன பேருந்துகள் மூலம் இராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஜூன் 13ந் தேதி சென்றன. அந்த வாகனங்களை காஞ்சிபுரம் – இராணிப்பேட்டை மாவட்ட எல்லையான பொன்னியம்மன் பட்டரையில் காவல்துறை நிறுத்திவிட்டன.

இதுவேறு மண்டலம், காஞ்சிபுரம் வேறு மண்டலம் வாகன போக்குவரத்துக்கு அனுமதியில்லை எனச்சொல்லி நிறுத்திவிட்டது காவல்துறை. இதனால் தொழிற்சாலை நிர்வாகம் அதிர்ச்சியடைந்துவிட்டது. பின்னர் அதிகார மட்டத்தில் பேசி, தொழிலாளர்களை இறக்கிவிட்டுவிட்டு வாகனங்கள் இருப்பிடத்துக்கு செல்ல அனுமதி வழங்க அதன்படி வாகனங்கள் சென்றதாக கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்