Skip to main content

ஆற்றுத் தண்ணீர் ஆவியாகாமல் தடுக்க மது, தண்ணீர் பாட்டில்களை வீசுகிறார்களா மதுப்பிரியர்கள்?

Published on 20/09/2021 | Edited on 20/09/2021

 

Do wine lovers throw bottles of wine and water to prevent river water from evaporating?

 

ஏரித்தண்ணீர் ஆவியாகாமல் தடுக்க தெர்மாகோல் பரப்பியது போல, காவிரித் தண்ணீர் ஆவியாகிவிடாமல் தடுக்கும் புது முயற்சியாக மது பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்களை வீசுகிறார்கள் போல மதுப் பிரியர்கள்.

 

டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை வாங்கிக்கொண்டு, அதே கையோடு தண்ணீர் பாட்டில், பிளாஸ்டிக் குவளைகள், பிளாஸ்டிக் பைகளில் அடைத்த பண்டங்களையும் வாங்கிக்கொண்டு சாலையோரம், வயல் வரப்பு, குளம், ஏரி, ஆற்றங்கரைகளில் அமர்ந்து மதுவைக் குடித்துவிட்டு போதை தலைக்கேறியதும் பாட்டிகளை உடைத்து சாலையிலும் வயலிலும் வீசுவதோடு பிளாஸ்டிக் பைகள், பாட்டில்களையும் தூக்கி வீசிவிட்டு சென்றுவிடுகிறார்கள்.

 

இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள், பாதசாரிகள் பாதிக்கப்படுவதோடு, வயலில் இறங்கி ஈரக்காலோடு நடவு செய்யும் பெண்கள், உழவு செய்யும் விவசாயி கால்களில் குத்துவதுடன், நிலத்தடி நீர் கீழே இறங்காமல் தடுக்கின்றன பிளாஸ்டிக் பைகள். அரசாங்கம் தடை விதித்தாலும் யாரும் கேட்பதில்லை. அதிகாரிகளும் கண்டுகொள்ளாததால் மக்காத பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு அதிகரித்து மக்களை வதைக்கிறது.

Do wine lovers throw bottles of wine and water to prevent river water from evaporating?

 

இதேபோல, ஆற்றங்கரை ஓரங்களில் மது குடிக்கும் மதுப்பிரியர்கள் போதை தலைக்கேறியதும் காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகளை ஓடும் ஆற்று நீரில் வீசுவதால், எங்கெல்லாம் கீழ் பாலங்கள் உள்ளதோ அங்கெல்லாம் அவை மலைபோல தேங்கி நிற்கின்றன. இதனால் மதகுகளில் அடைப்பு ஏற்பட்டு ஆற்றங்கரை உடைப்பு ஏற்படும் அபாய நிலையும் ஏற்படுகிறது. 

 

இப்படி புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோயில் அருகில் உள்ள கீழ்பாலத்தில் பல ஆயிரக்கணக்கான மது, தண்ணீர் பாட்டில்கள் தேங்கி மலை போல காட்சியளிப்பதைப் பார்த்துதான் ஒரு விவசாயி, இது ஆற்றுத்தண்ணீர் ஆவியாகாமல் தடுக்கவே இப்படி பாட்டில்களை வீசி தண்ணீரை மறைத்திருக்கிறார்கள் என்று வேதனையோடு சொல்லிச் சென்றார்.

 

இத்தனை கழிவுகளும் வயல்களுக்குள் போனால், அந்த வயல்களில் எப்படி விளைச்சல் இருக்கும்.. கொஞ்சமாவது சிந்திக்க வேண்டாமா? இனிமேலாவது திருந்தட்டும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.