Skip to main content

நாதியற்று போனதால் விரக்தி! வயதான தம்பதி தூக்கிட்டு தற்கொலை!!

Published on 31/10/2018 | Edited on 31/10/2018
ர்

 

தாரமங்கலம் அருகே, வயது முதிர்வாலும், பராமரிக்க ஆள்கள் இல்லாததாலும் ஏற்பட்ட விரக்தியில் முதிய வயது தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள சின்னகாடாம்பட்டியை சேர்ந்தவர் முத்துகவுண்டர் (90). இவருடைய மனைவி நல்லம்மாள் (80). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.


மூத்த மகன் ராஜா. வெளியூரில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகிறார். இரண்டாவது மகன் நாகராஜ், சின்னகாடாம்பட்டியிலேயே குடும்பத்துடன் தனியாக வசிக்கிறார். 


இரண்டு மகன்களும் திருமணத்திற்குப் பிறகு, அவரவர் குடும்பத்துடன் பெற்றோரை விட்டுவிட்டு தனித்தனியாகச் சென்றுவிட்டதால் அவர்களைக் கவனிக்க ஆள்களின்றி தவித்து வந்தனர். 


தள்ளாத வயதில், அந்த தம்பதியினர் மருந்து, மாத்திரை என நாள்களை நகர்த்தி வந்தனர். இந்நிலையில், வாழ்வை முடித்துக்கொள்ள முடிவு செய்த கணவனும், மனைவியும் நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.


அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கவனிக்க ஆள் இல்லாததால், தள்ளாத வயதில் தடுமாறி வந்த முதிய வயது தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

சார்ந்த செய்திகள்