Skip to main content

தொடர் போராட்டம்; மீனவர்கள் எடுத்த முடிவு!

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
The decision of the fishermen for continuous struggle

தமிழக கடலோரப்பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்யும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றன. கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து காலவரையறையற்ற போராட்டம் நடத்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் சங்கங்கள் சார்பில் கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்திருந்தனர். 

அதன்படி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்குவதைக் கண்டித்தும், மீனவர்களின் படகுகள் நாட்டுடைமையாக்கப்படுவதைக் கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் 700க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 18ஆம் தேதி முதல் காலவரையறையற்ற போராட்டத்தைத் தொடங்கினர். மீனவர்கள் தங்களது படகுகளில் கருப்புக் கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். மேலும், மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி இன்று (20-02-24) ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.

இதையொட்டி இன்று காலை ஏராளமான மீனவர்களும், சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டு சென்றனர். அதன் பிறகு, மீனவ சங்க பிரதிநிதிகளுடன், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், பிடிப்பட்ட படகுகளையும் மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு உத்தரவாதம் அளித்தார். இதனையடுத்து, மீனவர்கள் தங்களது நடைபயணப் போராட்டத்தை தற்காலிமாக ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்