![nn](http://image.nakkheeran.in/cdn/farfuture/WGrQAKXm-0cLcOwstqUEMLe33YwOFW7IDjbqvjXMMpo/1685446368/sites/default/files/inline-images/nm128_0.jpg)
நெல்லையில் மாமியாரை உருட்டுக் கட்டையால் தாக்கிக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய மருமகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் துலுக்கர்குளம் பஞ்சாயத்து துணை தலைவர் சண்முகவேலு. இவரது மனைவி சீதாராமலட்சுமி. நேற்று அதிகாலை சீதாராமலட்சுமி தூங்கிக் கொண்டிருந்த பொழுது முகத்தால் துணியை மூடிய மர்ம நபர் வீட்டுக்குள் புகுந்து அவரை கொடூரமாகத் தாக்கினார். மேலும், அவரது கழுத்தில் இருந்த ஐந்து சவரன் தங்கச்செயினை பறித்துக் கொண்டு ஓடினார்.
படுகாயமடைந்த சீதாராமலட்சுமி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். வீட்டிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொழுது சீதாராமலட்சுமியை தாக்கியது அவரது மருமகள் மகாலட்சுமி என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆண் போல உடை அணிந்து கொண்டு தலையில் ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு கையில் உருட்டுக் கட்டையுடன் சென்ற மகாலட்சுமி அவரை தாக்கியது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணையில் மாமியார் தன்னிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததால் திட்டமிட்டு அவரை தாக்கியதாகவும், ஆண் போல் வேடம் போட்டுக்கொண்டு அவரை தாக்கி அவர் கழுத்திலிருந்து நகை திருடி இந்த சம்பவத்தை திருட்டு சம்பவம் போல் சித்தரிக்க முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மகாலட்சுமியை போலீசார் கைது செய்தனர். அதே நேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சீதாராமலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் மகாலட்சுமியை சிறையில் அடைத்துள்ளனர்.