Skip to main content

மூதாட்டிக்கு உணவளித்த இன்ஸ்பெக்டர்!!!

Published on 21/04/2020 | Edited on 21/04/2020

நெய்வேலி அருகே 75 வயது மூதாட்டிக்கு உணவளித்து, சொந்த ஊருக்கு அழைத்துச் சென்ற காவல் ஆய்வாளரின் வீடியோ வைரல் ஆனதால் அவருக்கு பாராட்டுகள் குவிகிறது. 


  police Inspector helped



உலகத்தை அச்சுறுத்தி  கொண்டிருக்கும், கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை பிறப்பித்துள்ளன. பொது மக்களை பாதுகாப்பதற்காக காவல்துறை, மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, தூய்மை பணியாளர்கள் என அனைவரும் இரவு பகலாக போராடி வருகின்றனர். 

இந்நிலையில் கடலூர் மாவட்டம், நெய்வேலி நகர பகுதிக்குட்பட்ட இடங்களில் காவல் ஆய்வாளர் ஆறுமுகம் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது வடக்குத்து கிராமம் அருகே உள்ள கண்ணுத் தோப்பு பாலத்தில் 75 வயது மிக்க மூதாட்டி ஒருவர் மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த காவல் ஆய்வாளர் ஆறுமுகம், அந்த மூதாட்டியின் முகத்தில் தண்ணீர் தெளித்து, மயக்கம் தெளிந்த பின், அவருக்கு உணவு அளித்துள்ளார். பின்னர் அந்த மூதாட்டியை விசாரித்ததில் அவர், செங்கல்பாளையம் கிராமத்தை சேர்ந்த நீலம்மாள் என்பது தெரியவந்தது. பின்னர் அம்மூதாட்டியை, காவல்துறை வாகனத்திலேயே பத்திரமாக ஏற்றி கொண்டு, அவரது சொந்த ஊருக்கு கொண்டு சேர்த்துள்ளார். 

முதாட்டிக்கு, உணவு அளிக்கும் காணொளி, தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருவதால், காவல் ஆய்வாளர் ஆறுமுகத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்