Skip to main content

சாலையோர மரத்தில் கார் மோதி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

Published on 29/07/2020 | Edited on 29/07/2020
ddddd

 

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள வேலவிநாயகர்குப்பத்தை சேர்ந்த வைரக்கண்ணு மகன் சண்முகம் (40). இவர் மரம் அறுக்கும் பிளேடு விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று தனது நண்பர்களான அதேபகுதியை சேர்ந்த கலியபெருமாள் மகன் தட்சிணாமூர்த்தி (40), விருப்பாட்சி கிராமத்தை சேர்ந்த சீசேசான் செந்தில் (45), வெள்ளக்கண்ணு மகன் இளங்கோவன் (40),  குறிஞ்சிப்பாடி ஆண்டி தெருவை சேர்ந்த லட்சுமணன் மகன் கோதண்டராமன் (40) ஆகியோருடன் தனது காரில், கடலூர் முதுநகர் பகுதியிலுள்ள ஒரு மரப்பட்டறைக்கு சென்று மரம் அறுக்கும் பிளேடு புதுப்பித்து கொடுத்துவிட்டு தனது நண்பர்கள் நான்கு பேர்களுடனும் சண்முகம் தனது காரில் குறிஞ்சிப்பாடி நோக்கி வந்து கொண்டிருந்தார். 

 

காரை சண்முகம் ஓட்டினார். குள்ளஞ்சாவடி அடுத்த தோப்புக்கொல்லை அருகே மின்சார அலுவலகம் எதிரில் சாலையில் வந்து கொண்டிருந்தபோது கார் திடீரென்று சண்முகத்தின் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரம் இருந்த பனை மரத்தின் மீது அதிவேகமாக மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 

இதில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்த செந்தில், தட்சிணாமூர்த்தி,  இளங்கோ ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காரை ஓட்டி வந்த சண்முகம் மற்றும் கோதண்டராமன் இருவர் பலத்த காயங்களுடன்  உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதை பார்த்து சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள்,  பொதுமக்கள் இருவரையும் மீட்டு  கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

இதனிடையே இதுகுறித்து தகவலறிந்த குள்ளஞ்சாவடி காவல் காவல் ஆய்வாளர் சத்தியபாமா மற்றும் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் உயிரிழந்த மூன்று பேரின் உடல்களையும் மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

 

மேலும் இது குறித்து தகவலறிந்த இறந்து போன மூன்று பேரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர். விபத்தில் மூன்று பேர் பலியான சம்பவம் குறிஞ்சிப்பாடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.