Skip to main content

வேதனைக்குள்ளாகும் விவசாயிகள்... இடுப்பளவு தண்ணீரில் நெல்மணிகளை சுமக்கும் அவலம்..!

Published on 28/01/2021 | Edited on 28/01/2021

 

cuddalore district, virudhachalam farmers in trouble


கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் உள்ள மணிமுக்தா ஆற்றின் மறுகரையில் சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் அக்கிராம விவசாயிகள் சம்பா சாகுபடிக்கான நெற்பயிர்களை விவசாயம் செய்துள்ளனர்.


 
இந்நிலையில், கடந்த ஒரு மாத காலமாக பெய்த கன மழையால், மணிமுக்தா ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து, தற்போது வரை தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால், ஜனவரி முதல் வாரத்தில் இருந்து அறுவடைக்குத் தயாராக இருந்த 2,000 ஏக்கர் நெற்பயிர்களை, கனமழையால் அறுவடை செய்ய முடியாமல் இருந்த விவசாயிகள், தற்போது கைகளாலேயே அறுவடை செய்யத் தொடங்கியுள்ளனர். 

 

அக்கிராமத்தில் இருந்து மறுகரைக்கு உள்ள விவசாய நிலங்களுக்குச் செல்வதற்காக, அப்பகுதி விவசாயிகள் வருடம் தோறும் ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து, விவசாய வாகனங்கள், நெல் அறுவடை இயந்திரங்கள் செல்வதற்காக தரைப் பாலம் அமைத்திருந்தனர். மழையின்போது ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், தரைப்பாலம் முழுவதுமாக தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. மேலும், தொடர் மழையால் நெற்பயிர்கள் சாய்ந்த நிலையிலும், மறு முளைப்பு அடைந்துள்ள நிலையில், அடுத்த மழை வருவதற்குள், நெற்பயிர்கள் அனைத்தும் அறுவடை செய்யவேண்டும் என்பதால், கைகளால் அறுவடை செய்யத் தொடங்கியுள்ளனர். 

 

அவ்வாறு அறுவடை செய்த நெல்மணிகளை அதிவேகமாகச் செல்லக்கூடிய ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் விவசாயிகள் தலையில் தூக்கிக்கொண்டு கடந்து சென்று வருகின்றனர். ஒரு ஏக்கர் பரப்பளவு அறுவடை செய்வதற்கு 90 ஆட்கள் தேவை என்பதால், 2,000 ஏக்கர் விவசாய நிலங்கள் மறுகரையில் உள்ள நிலையில், அனைத்துப் பயிர்களையும் அறுவடை செய்து கொண்டுவர பல மாதங்கள் ஆகும் என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர். கை அறுவடை பணி, நெற்பயிர்களை இடம் மாற்றுதல், நெல்மணிகளைப் பிரித்தெடுத்தல் என ஒரு விவசாயிக்கு மூன்று நாட்கள் ஆகும் என்றும், அவ்வாறு மூன்று நாட்கள் ஆகின்றபோது, ஒரு கூலி ஆளுக்கு மூன்று நாட்களுக்கு 1,500 ரூபாய் விதம், 30 ஆட்களுக்கு 40,000 ரூபாய் செலவு செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.  

 

மேலும், ஆட்கள் பற்றாக்குறை, கூடுதல் செலவு, மன உளைச்சல் என அனைத்து விதத்திலும் விவசாயிகள் பெரும் வேதனை அடைவது மட்டும் இல்லாமல், விவசாயத்திற்காக செலவு செய்த பணத்தைவிட, அறுவடைக்கு அதிக அளவு பணம் விரயம் செய்யும் நிலை உள்ளதால், கடன் தொகை, குடும்ப வருமானம், மாணவர்களின் எதிர்காலம் என எதையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தற்கொலை கூட செய்து கொள்ளலாம் என்று தோன்றுவதாக விவசாயிகள் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர். 

 

உடனடியாக மாவட்ட நிர்வாகம் மறுகரையில் உள்ள விவசாயிகளின் நிலை அறிந்து, அறுவடை இயந்திரங்கள், விவசாய வாகனங்கள் செல்வதற்கான வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் அலட்சியப்படுத்தினால் தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என்று கவலை தெரிவிக்கின்றனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.