Skip to main content

காவிரி விவகாரம்; முழு அடைப்பு போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு

Published on 09/10/2023 | Edited on 09/10/2023

 

CPI supports a total blockade over the Cauvery issue

 

காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் பாராமுகப் போக்கையும், கர்நாடக மக்களிடம் தவறான கருத்துக்களை கூறி வரும் அமைப்புகளின் பொறுப்பற்ற செயல்களையும் கண்டித்து காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சார்பாக நாளை மறுநாள் காவிரி டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடப்பு பயிராண்டில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை விளைந்து, கதிர் முற்றும் நிலையில் தண்ணீர் இல்லாமல் கருகி மடிந்து வருகிறது. விளைந்து நிற்கும் குறுவையின்  உயிரைக் காப்பாற்ற, காவிரியில் வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் கேட்டு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் முறையிடப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் கிருஷ்ண ராஜ சாகர் அணைக்கு மேலே உள்ள நீர் தேக்கங்களில் போதுமான தண்ணீர் இருந்தும், தமிழ்நாட்டின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. 

 

இதன் காரணமாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் திரும்ப, திரும்ப முறையிட்டு, சட்டப் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில் பெங்களூரு குடிதண்ணீர் தேவை என கவனத்தை திசை திருப்பி, பாஜக உள்ளிட்ட சில  இனவெறி அமைப்புகள் தமிழ்நாட்டின் சட்டப்பூர்வமான உரிமைக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. காவிரி நீர் மேலாண்மை ஆணையம், தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீர் அளவை தன்னிச்சையாக குறைத்து விட்டது. இது தொடர்பாக பாஜக ஒன்றிய அரசு தலையிட்டு காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு, காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவுகளை அமலாக்க முன் வராமல், தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. 

 

இந்த நிலையில் ஒன்றிய அரசின் பாராமுகப் போக்கையும், கர்நாடக மக்களிடம் தவறான கருத்துக்களை கூறி வரும் அமைப்புகளின் பொறுப்பற்ற செயல்களையும் கண்டித்து, தமிழ்நாட்டின் உணர்வை பிரதிபலிக்கும் முறையில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் நாளை மறுநாள் (11.10.2023) காவிரி டெல்டா மாவட்டங்களில் நடத்தும் முழு அடைப்பு மற்றும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பான மறியல் போராட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு முழு ஆதரவை தெரிவித்துக் கொள்வதுடன், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் போராட்டத்தில் முழுமையாக பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்