கொரோனா வைரஸ் பாதிப்பால் ஐபிஎல் போட்டிகளுக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், மார்ச் 29-ம் தேதி தொடங்கவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்குத் தடை விதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் அலெக்ஸ் பென்சைகர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
![Corona fears ... Case for banning IPL matches](http://image.nakkheeran.in/cdn/farfuture/OV6G0tB8S1ga20WbzJeSAYxexTayEd19n2_zYXmqSak/1583918982/sites/default/files/inline-images/download%20%2831%29_0.jpg)
அதில், கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி சீனாவின் வுஹான் நகரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை சீன மருத்துவர் லீ வென்லியங் என்பவர் கண்டறிந்தார். தற்போது வரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த பொது இடங்களில் மக்கள் கூட்டமாகக் கூட வேண்டாம் என அறிவுறுத்தப்படுள்ளது. இதனால் 150 ஆண்டுகால பழமையான இத்தாலி கால்பந்து லீக் போட்டிகள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
![Corona fears ... Case for banning IPL matches](http://image.nakkheeran.in/cdn/farfuture/dYvzZv3R7aTIL9zRYo4-EBduc9ck3EIVs5zp9XXcy1c/1583919078/sites/default/files/inline-images/rt56tt6.jpg)
மார்ச் 29-ம் தேதி தொடங்கி மே 4-ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடக்க உள்ளன. இந்தப் போட்டிகளைக் காண மைதானங்களில் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை மக்கள் கூடுவார்கள் என்பதால், இந்தப் போட்டிகளுக்குத் தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்..
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.