Skip to main content

தனியார் நிதி நிறுவனங்களில் தொடரும் நகை மோசடி... அடுத்தடுத்து சிக்கும் நிறுவன ஊழியர்கள்!

Published on 24/04/2021 | Edited on 24/04/2021

 

pudukkottai district small finance golds police investigation and arrested employees

 

புதுக்கோட்டையில் கடந்த சில வருடங்களாக கனரா வங்கி, திருவிதாங்கூர் வங்கி, பஞ்சாப் நேஷ்னல் வங்கி... இப்படி பல வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் ஆகியவற்றில் பொதுமக்கள் அடகு வைத்துள்ள தங்க நகைகள் கிலோ கணக்கில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்ந்து நடந்துள்ளது. இந்த வங்கிகளில் வேலை செய்த சிலர் மர்மமாக உயிரிழந்துள்ளனர். சில வங்கிகளில் நகைகள் மீட்கப்படாமலேயே உள்ளன. இந்தநிலையில்தான், தற்போது எச்டிபி வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த 304.625 பவுன் தங்க நகைகளைக் காணவில்லை. 

 

இதன் மதிப்பு ரூபாய் 1 கோடி. இங்கு திருடிய நகைகளை மற்றொரு தனியார் நிதி நிறுவனமான இன்டல் மணி என்ற நிதி நிறுவனத்தில் அடகு வைத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இரு நிதி நிறுவன மேலாளர்கள் உட்பட 4 ஊழியர்களைக் கைது செய்த காவல்துறையினர் நகைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

pudukkottai district small finance golds police investigation and arrested employees

 

இதுகுறித்து விபரம் அறிந்த காவல்துறையினர் கூறும்போது, "ஒவ்வொரு வங்கி, நிதி நிறுவனத்திலும் ஆண்டு தணிக்கை செய்வது வழக்கம். அதேபோல்தான் புதுக்கோட்டை எச்டிபி நிறுவனத்திலும் ஆண்டுத் தணிக்கை நடந்துள்ளது. தணிக்கை முடிவில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த 304.625 பவுன் தங்க நகைகளைக் காணவில்லை என்பது தெரிய வந்தது. அதன் பிறகு எச்டிபி திருச்சி மண்டல மேலாளர் ரமேஷ், காவல்துறையில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் கிளை மேலாளர் உமாசங்கர் (வயது 42), நகைக் கடன் பிரிவு சோலைமணி (வயது 37), தனிநபர் கடன் பிரிவு முத்துக்குமார் (வயது 27) ஆகியோர் இணைந்து தங்கள் வங்கியில் வாடிக்கையாளர்கள் அவசரத்திற்கு அடகு வைத்த தங்க நகைகளைத் திருடி, தங்கள் கூட்டாளியான இன்டல் மணி நிதி நிறுவன மேலாளர் மாரிமுத்துவுடன் இணைந்து இன்டல் மணி நிதி நிறுவனத்தில் அடகு வைத்து, பணம் எடுத்து சந்தோசமாக இருந்துள்ளனர். சுமார் 77 முறை அடகு வைத்துள்ளனர். இடையில், ஆண்டுத் தணிக்கைக்கு வருவதாக தகவல் கிடைத்தால், திருடிய நகைகளைக் கொண்டு போய் வைத்து சரி செய்து கொண்டனர். 

pudukkottai district small finance golds police investigation and arrested employees

 

ஆனால் இந்தமுறை தணிக்கைக்கு முன்பு தகவல் சொல்லாமல் வந்ததால் சிக்கிக்கொண்டனர். தற்போது எச்டிபி வங்கியில் திருடிய நகைகளை இன்டல் மணி நிதி நிறுவனத்தில் இருந்து மீட்ட காவல்துறையினர், அனைத்தையும் சரிபார்த்து நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் வங்கி வாடிக்கையாளர்களின் தங்க நகைகளைத் திருடி, அடகு வைத்து மோசடி செய்த இரண்டு நிதி நிறுவனங்களின் மேலாளர்கள் உட்பட 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்" என்றனர்.

 

இதேபோல் மற்ற வங்கிகளிலும் திருடப்பட்ட நகைகளை மீட்டு நடவடிக்கை எடுத்தால் நல்லது. வங்கி அதிகாரிகள், அலுவலர்களே வாடிக்கையாளர்களின் நகைகளைத் திருடிய சம்பவம், வாடிக்கையாளர்களிடையே வங்கி மீதான நம்பிக்கையை இழக்கச் செய்து, அச்சமடைய செய்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Next Story

பரிதாபமாக உயிரிழந்த பெண் ஆய்வாளர்; உடலைச் சுமந்து சென்ற எஸ்.பி!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

புதுக்கோட்டை நகரில் பழைய மருத்துவமனைக்கு அருகே பல வருடங்களாக செயல்படாத சிக்னல் அருகே நகராட்சி சார்பில் ஞாயிற்றுக் கிழமை மதியம் திடீரென பெரிய திண்ணை போல வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில், எந்தவிதமான எச்சரிக்கை அடையாளமும் வைக்கவில்லை, வெள்ளைக் கோடுகள் போடவில்லை. சில மணி நேரங்களுக்குள் திடீர் வேகத்தடையில் பலர் கீழே சாய்ந்தனர்.

sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

அதே போல திருச்சி திருவரம்பூர் 2 காவல் நிலைய ஆய்வாளர் பிரியா தன் குழந்தைகளைப் பார்க்க இரவு பேருந்தில் வந்து இறங்கியுள்ளார். அவரது கணவர் புல்லட்டில் வந்து வீட்டிற்கு அழைத்துச் சென்ற போது பிரதான சாலையில் அடையாளமில்லாமல் அமைக்கப்பட்டுள்ள திடீர் வேகத்தடையில் ஏறி இறங்கும் போது பினனால் இருந்த ஆய்வாளர் பிரியா கீழே சாய பின்பக்கம் தலையில் அடிபட்டு படுகாயமடைந்தார்.

படுகாயமடைந்த ஆய்வாளரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் செவ்வாய் கிழமை (09.04.2024) காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பெண் காவல் ஆய்வாளர் படுகாயமடைந்த பிறகு யாரோ கோலமாவு வாங்கி அடையாளமிட்டனர். அதன் பிறகு இரவில் நகராட்சி நிர்வாகம் அடையாள வெள்ளைக் கோடுகள் போட்டுள்ளனர்.

sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

இந்த நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த ஆய்வாளர் பிரியா உடல் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு மாலையில் அவரது சொந்த ஊரான நெடுவாசல் கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது. அப்போது புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி வந்திதா பாண்டே, டிஎஸ்பிக்கள் ஆலங்குடி பவுல்ராஜ், புதுக்கோட்டை ராகவி, கோட்டைப்பட்டினம் கெளதம் மற்றும் போலீசார் சல்யூட் அடித்து அஞ்சலி செலுத்தினர்.

sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

அனைவரும் அஞ்சலி செலுத்திய பிறகு நடந்த இறுதி ஊர்வலத்தில் எஸ்.பி வந்திதா பாண்டே, உறவினர்களுடன் சேர்ந்து ஆய்வாளர் பிரியாவின் உடலை மயானத்திற்கு தூக்கிச் சென்றது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து ஆய்வாளர் பிரியாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

புதுக்கோட்டை நகராட்சியில் தீடீரென அமைக்கப்பட்ட வேகத்தடையில் எச்சரிக்கை அடையாளப் பதாகை, வெள்ளைக் கோடு போடாமல் அலட்சியமாக இருந்ததால், ஆய்வாளர் உயிர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.