Skip to main content

இரண்டாம் நிலை பெண் காவலர்களுக்கான பயிற்சி நிறைவு

Published on 06/01/2024 | Edited on 06/01/2024
Completion of training for secondary female constables

வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில், 284 இரண்டாம் நிலை பெண் காவலர்களுக்கான 7 மாதகால பயிற்சி நிறைவு விழா கோட்டை கவாத்து மைதானத்தில் நேற்று(5.1.2024) நடைபெற்றது. இதில், பயிற்சி காவலர்களின் அணிவகுப்பு மரியாதையினை காவல் பயிற்சி பிரிவு டிஐஜி ஆனி விஜயா ஏற்றுக்கொண்டார். இவ்விழாவில் வேலூர் சரக டிஐஜி முத்துசாமியும் கலந்துகொண்டு சிறப்பாகப் பயிற்சியை முடித்த காவலர்களுக்குப் பதக்கங்களையும் வழங்கினார்கள்.

இதில், சட்டப் பிரிவு பயிற்சியில் அருணாஸ்ரீயும் கவாத்து பயிற்சியில் கனிமொழியும், துப்பாக்கிச் சுடுதலில் ஜனனியும் முதல் பரிசு வென்றனர். ஆல்ரவுண்டராக வெற்றி பெற்ற அருணா ஸ்ரீக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

இதில் வேலூர் சரக டிஐஜி முத்துசாமி பேசுகையில், பிற்படுத்தப்பட்ட மிக பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் வாழ்வில் மேன்மையுறும் வகையில் அனைத்து மக்களுக்காகவும் நீங்கள் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என பயிற்சி முடித்த பெண் காவலர்களிடம் கூறினார். 

பின்னர் டிஐஜி ஆனி விஜயா பேசுகையில், வரலாற்று சிறப்பு மிக்க கோட்டையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் பெண் காவலர்கள் நீங்கள் பயிற்சியை பெற்றுள்ளது மிகுந்த சிறப்பானது. தமிழ்நாட்டில் தான் பெண்களுக்கு 30 சதவிகித இட ஒதுக்கீட்டை அளித்துள்ளனர். காவல்துறையில் எல்லா காவல்நிலையங்களிலும் தற்போது 50 சதவிகிதம் பெண் காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பெண் காவலர்கள், பெண்கள் குழந்தைகள் பிரச்சனைகளை நல்ல முறையில் கையாண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கின்றனர். எப்போதும் பெண் காவலர்கள் சேவை மனப்பான்மையுடன் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றார். இவ்விழாவில் பயிற்சி முடித்த பெண் காவலர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், பொதுமக்களும் பங்கேற்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

குஜராத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
worth Rs.300 crore seized in Gujarat

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். 7 பேர் கைதான நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் என்றும் கூறப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி  சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.