
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள கொள்ளிடம் புறவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த சாலை விரிவாக்கப் பணிக்காக சீர்காழிக்கு அருகே உள்ள திருமுல்லைவாசல், வேட்டங்குடி, பழையபாளையம், மேலப்பெரும்பள்ளம் உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து மணல் அள்ளப்படுகிறது.
அதில் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனரக லாரிகளால் அதிகளவிலான மணல் குவியலை ஏற்றிக்கொண்டு பாதுகாப்பற்ற முறையில் செல்கின்றனர். அதனால் திருமுல்லைவாசல் முதல் சீர்காழி வரை உள்ள பகுதிகளில் மணல் சிதறி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக லாரிகள் செல்லும் சாலைகளில் விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் பற்றி அறிந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அப்பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதைத் தொடர்ந்து, விசிக கட்சியின் வர்த்தக அணி மாநில துணை செயலாளர் விஜயரங்கன் தலைமையில் மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சீர்காழி ஏஎஸ்பி லாமேக் மற்றும் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில், "புறவழிச்சாலைக்காக லாரிகளில் கொண்டு செல்லப்படும் மணலை பாதுகாப்பாக எடுத்துச் செல்ல வேண்டும். மேலும், விபத்துகளை ஏற்படுத்தும் லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் வருகின்ற 19 ஆம் தேதியன்று பாதுகாப்பற்ற முறையில் செல்லும் லாரிகளை சிறைபிடித்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.