Skip to main content

ஸ்ரீரங்கத்தின் புனிதத்தை கெடுக்கும் பேஸ்புக் வீடியோ வெளியிட்டவர் மீது புகார்!!

Published on 25/10/2018 | Edited on 25/10/2018
sri rangam

 

ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரெங்கராஜன் நரசிம்மன் என்பவர் ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள மூலவர் சிலை உள்ளிட்ட பழங்கால சிலைகள் எல்லாம் மாயமாகிவிட்டது. காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அதன் அடிப்படையில் சிலைதடுப்பு பிரிவுக்கு விசாரிக்க சொல்ல இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் வந்தது. 

 

அப்போது நீதிபதி ரெங்கராஜன் நரசிம்மனிடம் கோயிலுக்குள் நடைபெறும் நிகழ்ச்சிகள் மற்றும் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் வீடியோ, போட்டோ எடுத்து சமூக ஊடகங்களில் பரப்ப கூடாது என்று நீதிகள் அறிவுறுத்தினார்கள். இதனை அடுத்து வழக்கு வரும் 1ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

 

இந்தநிலையில் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் திருச்சி மாநகர காவல்துறை ஆணையரிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு கடந்த 19-ம் தேதி வந்த ரங்கராஜன் நரசிம்மன், சேது அரவிந்த், காளிமுத்து, ராமசந்திரன், ஆனந்த் ஆகியோர் தடைசெய்யப்பட்ட பகுதியில் உள்ளே நுழைந்து வீடியோ புகைப்படங்கள் எடுத்து அதை பேஸ்புத்தகத்தில் பதிவு செய்து ஸ்ரீரங்கம் கோவிலுக்கு களங்கத்தையும், புனித தன்மையை கெடுப்பதாகவும், இந்த செயல் பக்தர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் உள்ளது எனவும் கூறப்பட்டது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்தனர். 

 

இந்த புகாரை விசாரிக்கும் ஸ்ரீரங்கம் காவல் ஆய்வாளர் உமாசங்கர் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் இவர்களிடம் தனித்தனி விசாரணை நடைபெறும் என்கிறார். விசாரணைக்கு பிறகே நடவடிக்கை பாயும் என்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள். 

சார்ந்த செய்திகள்

Next Story

மனைவிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய கணவருக்கு சிறை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
 The court action decision for Husband jailed for sending video to wife

கர்நாடகா மாநிலம், பெங்களூர் ராஜாஜி நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் 36 வயது மிக்க இளைஞர் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். அவருக்கும், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமான சிறிது நாளிலேயே, கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. அதனால் அந்த பெண், கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டுள்ளார். ஆனால், கணவர் விவாகரத்து தரவில்லை என்று கூறப்படுகிறது. 

இதில் மனமுடைந்த அந்த பெண் பிரிந்து வாழ்ந்து வந்தார். இதற்கிடையே, அந்த பெண் வெளிநாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த பெண்ணுக்கு அவரது கணவர் மின்னஞ்சல் மூலம் ஆபாச வீடியோக்களை அனுப்பி, ஆபாசமான குறுந்தகவல்களையும் அனுப்பி வந்துள்ளார். இதில் கோபமடைந்த அந்த பெண், இந்த விவகாரம் குறித்து பெங்களூரில் வசித்து வரும் தனது சகோதரரிடம் கூறியுள்ளார். அதன் பேரில், அந்த பெண்ணின் சகோதரர் பெங்களூர் போலீசில் புகார் அளித்துள்ளார். 

இதனையடுத்து, வெளிநாட்டில் இருந்து பெங்களூர் வந்த பெண், கணவர் அனுப்பிய ஆபாச வீடியோக்கள் தொடர்பானது குறித்து தனது கணவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய விசாரணையின் அடிப்படையில், தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், இது தொடர்பான வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. அந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று (19-03-24) நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்தது. அதில், விவாகரத்து கேட்டு பிரிந்து வாழும் மனைவிக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி மன உளைச்சல் ஏற்படுத்தியது உறுதியானதால், தனியார் நிறுவன ஊழியருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனையும், ரூ.45,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டது.

Next Story

“எங்களை காப்பாற்றுங்கள்” - ரஷ்ய ராணுவத்தால் கதறும் இந்தியர்கள்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
 Indian tourists shouts Save us from Russia

உக்ரைன் - ரஷ்யா இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் சூழ்நிலை உருவாகி நீடித்து வரும் நிலையில் மீண்டும் ரஷ்யா தீவிர தாக்குதலை உக்ரைன் மீது தொடுத்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவுக்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் உக்ரைன் எல்லையில் சிக்கியிருப்பதாக அவர்கள் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், 7 இந்தியர்கள் ரஷ்ய ராணுவ உடைகள் அணிந்து பேசியதாவது, “கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி புத்தாண்டை கொண்டாடுவதற்காக ரஷ்யாவிற்கு சுற்றுலா பயணிகளாக வந்தோம். வெவ்வேறு இடங்களுக்குச் செல்ல எங்களுக்கு உதவிய ஒரு ஏஜெண்டை நாங்கள் சந்தித்தோம். அதன் பின்னர், அந்த ஏஜெண்ட் எங்களை பெலாரஸுக்கு அழைத்துச் செல்ல முன்வந்தார். ஆனால், அங்கு விசாவுடன் தான் செல்ல வேண்டுமென்று எங்களுக்கு தெரியாது. 

அதன் பின், நாங்கள் பெலாரஸுக்குச் சென்றோம். அங்கு நாங்கள் அவருக்கு பணம் கொடுத்தோம். ஆனால், அவர் அதிக பணம் கேட்டார். எங்களிடம், அவர் கேட்ட பணம் இல்லாததால் எங்களை நெடுஞ்சாலையில் விட்டுவிட்டு சென்றுவிட்டார். அதன் பின்னர், அங்கு வந்த போலீசார், எங்களை பிடித்து ரஷ்ய ராணுவத்திடம் ஒப்படைத்துவிட்டனர். ரஷ்ய இராணுவம் எங்களை தெரியாத இடத்தில் மூன்று, நான்கு நாட்கள் அடைத்து வைத்தது. பின்னர் உதவியாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் சமையல்காரர்களாக பணிபுரிய எங்களை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வற்புறுத்தினார்கள். ஒருவேளை கையெழுத்து போடவில்லையென்றால், எங்களை 10 ஆண்டுகள் சிறையில் அடைத்து விடுவோம் என அவர்கள் மிரட்டினார்கள். 

அந்த ஒப்பந்தம், அவர்களின் மொழியில் இருந்ததால், அது எங்களுக்கு புரியவில்லை. ஆனால், நாங்கள் அதில் கையெழுத்திட்டோம். அதன் பிறகு, அவர்கள் எங்களை ராணுவப் பயிற்சி மையத்தில் சேர்த்தனர். பின்னர் தான், நாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. அவர்கள் எங்களை ராணுவத்தில் சேர்த்து பயிற்சி கொடுத்தனர். 

ஒரு வருடத்திற்குப் பிறகுதான் நாங்கள் வெளியேற முடியும் என்று ரஷ்ய இராணுவம் எங்களிடம் கூறுகிறது. உக்ரைன் எல்லையில் எங்களை இறக்கிவிட்டு துப்பாக்கியுடன் முன்னேறிச் செல்லுங்கள் என்று உத்தரவிட்டனர். அவர்கள், இந்த போரில், வெற்றிபெற உதவுமாறு எங்களைக் கேட்கிறார்கள். நாங்கள் போருக்கு தயாராகவில்லை. அவர்களுக்கு எப்படி உதவுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. இதில், நாங்கள் பிழைக்காமல் கூட போகலாம். இது எங்கள் கடைசி வீடியோவாக இருக்கலாம். அதனால், எங்களை காப்பாற்றுங்கள்” என்று தெரிவித்தனர். 

இதனிடையே, ரஷ்யா சார்பில் உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப்பட்ட இந்தியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவர் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது அஸ்பன் என தெரியவந்துள்ளது. மேலும், அந்த 7 பேர் யார் என்பது குறித்த விசாரணையில், ககான்தீப் சிங் (24), லவ்பீரித் சிங் (24), நரேன் சிங் (22), குர்பீரித் சிங் (21), குர்பீர்த் சிங் (23), ஹர்ஸ் குமார் (20), அபிஷேக் குமார் (21) எனத் தெரியவந்தது. இதனையடுத்து, அந்த 7 இந்தியர்களை மீட்க அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு செய்யும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.