Skip to main content

சினிமாவில் காமெடி! நிஜத்தில் டிராஜடி! திருடிக் குடித்த மது உயிரைப் பறித்தது!

Published on 08/04/2018 | Edited on 08/04/2018
madhu bottle


மது குடித்து உடல் கெட்டு இறப்பவர்கள் அனேகம் பேர். செட்டியபட்டியைச் சேர்ந்த சின்னழகோ, மண்ணில் புதைக்கப்பட்டிருந்த மதுபாட்டிலை திருட்டுத்தனமாக எடுத்து, அதைக் குடித்து உயிரை விட்டிருக்கிறார்.

சினிமா ஒன்றில், கவுண்டமணி – செந்தில் காமெடி காட்சியில், மொந்தையிலிருந்து திருட்டுத்தனமாகக் குடிக்கும் கள்ளில் ஊமத்தங்காய் கரைசலைக் கலந்து, ஆளைப்பிடிப்பது நடக்கும். அதே பாணியில், சீரியஸாக செய்த விஷயம்தான் ஒரு உயிர் போகக் காரணமாகிவிட்டது.
 

village


திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகிலுள்ள கோட்டைப்பட்டியில், திருட்டுத்தனமாக மது விற்பனை செய்து வந்தார் தீபன். காவல்துறையினருக்குப் பயந்து, துவரங்குறிச்சியில் உள்ள தன்னுடைய தோட்டத்தில் மது பாட்டில்களை அங்கங்கே புதைத்து வைத்து, கூடுதல் விலைக்கு விற்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். புதைக்கப்பட்ட இடத்திலிருந்து, மதுபாட்டில்கள் அவ்வப்போது காணாமல் போனதால் கோபமான தீபன், ஊசி மூலம் பூச்சிக்கொல்லி மருந்தை, மதுபாட்டிலுக்குள் செலுத்தி புதைத்து வைத்தார்.

செட்டியபட்டியைச் சேர்ந்த சின்னழகு, வழக்கம்போல தீபனின் தோட்டத்துக்குச் சென்று, குழி தோண்டி, புதைக்கப்பட்ட மதுபாட்டிலை திருடி எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்று மருந்து அருந்தியபோது, வாயில் நுரை தள்ளியிருக்கிறது. மயங்கிச் சரிந்த அவரை துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் – துவரங்குறிஞ்சி காவல்நிலையம் வழக்கு பதிவுசெய்து, விசாரணை நடத்தி வருகிறது.

சார்ந்த செய்திகள்