கோவை மாநகராட்சியை கண்டித்து அனைத்துக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்
கோவை மாநகராட்சியில் விதிக்கப்பட்ட புதிய வரி விதிப்புகளை கண்டித்தும், அவற்றை திரும்ப வலியுறுத்தியும் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நகரில் உள்ள 100 வார்டுகளிலும் அனைத்து கட்சிகளின் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது . இதன் ஓரு பகுதியாக இன்று கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பாக மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், சி.பி.ஐ, சி.பி.எம், மதிமுக, கொ.ம.தே.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது குடிநீர் இணைப்பிற்கு உயர்த்தப்பட்ட வைப்பு தொகையை திரும்பபெற வேண்டும் எனவும் குப்பைக்கு வரி விதிக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர். மாநகராட்சி அலுவலகம் முன்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்திய அனைத்துக்கட்சியினர் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்துக்கட்சிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அருள்குமார்