Skip to main content

11 கோழி முட்டைகளை விழுங்கிய நாகப் பாம்பால் பரபரப்பு

Published on 22/09/2024 | Edited on 22/09/2024
The cobra that entered the cage and swallowed 11 eggs caused a stir

ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள வீட்டுத் தோட்டத்தில் உரிமையாளர் கோழி வளர்த்து வந்தார். அந்த கோழி, முட்டைகளை இட்டு அடைகாத்து வந்தது. இதற்காக கோழி கூண்டு கட்டப்பட்டு அதில் கோழி வளர்க்கப்பட்டு வந்தது. நேற்று  காலை வழக்கம் போல வீட்டின் உரிமையாளர் கோழி கூண்டுக்குச் சென்று பார்த்தபோது கோழி இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் கோழி முட்டைகளும் மாயமாகி இருந்தது. இதனால் கோழி கூண்டுக்குள் கைவிட்டு பார்த்தபோது அந்த கோழி கூண்டுக்குள் பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து பாம்பு பிடி வீரர் யுவராஜ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. யுவராஜ் சம்பவ இடத்திற்கு வந்து கோழி கூண்டில் இருந்த பாம்பை சுமார் 20 நிமிடம் போராடி பிடித்தார். அந்தப் பாம்பு ஆறடி நீளமுள்ள நாகப்பாம்பு என தெரிய வந்தது. பின்னர் அந்தப் பாம்பை கோழி கூட்டில் இருந்து வெளியே கொண்டு வந்தபோது அந்தப் பாம்பு தான் விழுங்கிய 11 முட்டைகளை கக்கியது. பின்னர் அந்தப் பாம்பை அவர் அடர்ந்த வனப்பகுதியில் விட்டார்.

சார்ந்த செய்திகள்