தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்துள்ள சூழலில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 31ம் தேதி உத்தரவிட்டுள்ளார். மேலும், ஜனவரி 10-ஆம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஜனவரி 10-ஆம் தேதி வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. மேலும், அனைத்து பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் போன்றவை நிறுத்தி வைக்கப்படுவதாகவும், தங்கும் விடுதிகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள், யோகா, உடற்பயிற்சி நிலையங்கள் 50 சதவீத வாடிக்கையாளருடன் செயல்படும். திருமண நிகழ்வுகளில் அதிகபட்சம் 100 நபர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே கலந்து அனுமதி வழங்கப்படும் என்றும் தமிழக அரசின் சார்பாக வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கரோனா பாதிப்பு தீவிரமாக இருப்பதால் நாளை காலை மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.