Skip to main content

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

Published on 03/05/2024 | Edited on 03/05/2024
thirupathi brothers complaint against kamalhassan in producers council

கமல்ஹாசன் நடிப்பில், ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான படம் உத்தம வில்லன். இப்படத்தில் இயக்குநர் பாலச்சந்தர், பூஜா குமார், ஆன்ரியா, பார்வதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தை ஜிப்ரான் இசையமைத்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இப்படம் வெளியாகி 9 ஆண்டுகளைக் கடந்துள்ளது. கடந்த மாதம் இப்படம் தொடர்பாக யூடியுப் சேனல் ஒன்று பொய்யான தகவல்களைப் பரப்புவதாக திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் கண்டனம் தெரிவித்திருந்தார்கள்.

இந்த நிலையில் கமல்ஹாசன் மீது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், “எங்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் கமல் ஹாசனை 2013ஆம் ஆண்டு ஒரு தமிழ் திரைப்படம் தயாரிப்பதற்காக அணுகினோம். கமல் ஹாசன் சம்மதித்து எங்களிடம் ஒரு கதையை கூறினார். அந்தக் கதை எங்களுக்கு மிகவும் பிடித்திருந்த காரணத்தால் அவருடைய ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் எங்கள் நிறுவனமான திருப்பதி பிரதர்ஸுக்கு முதல் பிரதி அடிப்படையில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் படத்தை செய்து தருவதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. மேலும் கமல் ஹாசன் கேட்டுக்கொண்டதிற்கிணங்க படத்தின் வெளிநாட்டு உரிமை ரூ.10 கோடிக்கும், வட இந்தியா உரிமை ரூ.5 கோடிக்கும் கமல் ஹாசனே எடுத்துக் கொண்டதால் மீதமுள்ள ரூ.35 கோடிக்கு (வெளிநாடு மற்றும் வட இந்தியா உரிமை இல்லாமல் ஒப்பந்தம் இருவரிடையே கையெழுத்தானது. 

ஒப்பந்தம் கையொப்பமான அன்றே ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு முன்பணமாக ரூ.15 கோடி தரப்பட்டது. முன்பணம் தரப்பட்ட ஒரு வாரத்தில் கமல்ஹாசன் எங்களை அழைத்து முதலில் கூறிய கதையைச் செய்யவில்லை என்றும் அதற்கு பதிலாக இப்போது வேறு ஒரு கதையைக் கூறுவதாகவும், இக்கதையை வேறொரு இயக்குநர் இயக்குவதாகவும் கூறினார். அந்தக் கதை எங்களுக்கு பிடிக்கவில்லை. எனவே நாங்கள் அந்தக் கால கட்டத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த மலையாள படமான திரிஷ்யம் படத்தினை வெளியான மூன்றாவது நாளில் கமல் ஹாசனுக்கு திரையிட்டு காண்பித்து அந்தப் படத்தை நடித்து, தயாரித்து தருமாறு கேட்டுக்கொண்டோம். அதற்கு கமல்ஹாசன் என்னுடைய சகோதரர் இயக்குநர் லிங்குசாமியை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஏன் என் மேல் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? என்றும் மேலும் கமல்ஹாசன் அந்த திரிஷ்யம் கதையைப் படமாக்க தனக்கு விருப்பமில்லை என்றும் கூறிவிட்டார். 

thirupathi brothers complaint against kamalhassan in producers council

இதனால் நாங்களும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி கொண்டிருந்தோம். ஆனால் அவர் எங்களிடம் மறுத்த திரிஷ்யம் பட கதையை ஓரிரு வாரங்கள் கழித்து அதே திரிஷ்யம் பட கதையை வேறொரு நிறுவனத்திடம் கமல் ஹாசன் ஒப்பந்தம் செய்து கொண்டார். நாங்கள் முன் தொகை கொடுத்த பிறகும் வேறொரு நிறுவனத்திற்கு கமல் ஹாசன் ஒப்பந்தம் செய்ததை அறிந்து அதிர்ச்சிக்கு உள்ளான நாங்கள் கமல் ஹாசனை அணுகி என்ன இப்படி செய்துவிட்டீர்களே என்று கேட்டோம். இதை சமாளிக்கும் விதமாக மீண்டும் ஒரு கதையை எங்களிடம் கூறினார். அந்தக் கதையும் எங்களுக்கு விருப்பமில்லாததால், கமல் ஹாசன் முதலில் கூறிய கதையையே எங்களுக்கு செய்து தருமாறு மீண்டும் அவரிடம் கோரிக்கை வைத்தோம்.

ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டு இந்தப்படம் என் மனதிற்கு நெருக்கமானதென்றும் அதற்கு உத்தமவில்லன் தலைப்பு வைத்து அதை தன் நண்பர் ரமேஷ் அரவிந்த் மூலம் இயக்கி தருவதாக தெரிவித்தார். அதில் எதாவது உங்களுக்கு தவறு நடக்கும் பட்சத்தில் படத்தின் நஷ்டத்தை நான் முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறேன் என்ற உறுதியும் அளித்தார். அதை நம்பி நாங்களும் அந்தப் படத்தைத் தயாரிக்க ஒப்புக்கொண்டு மீதி தொகையான ரூ.20 கோடியை படத்தின் ஒவ்வொரு ஷூட்டிங் அட்டவணைப்படி எந்தவித தாமதமின்றி சரியான நேரத்தில் வங்கி மூலமாக பணத்தைக் கொடுத்து முடித்துவிட்டோம். உத்தமவில்லன் படம் பாதி தயாரிப்பில் இருந்த போது தான் கமல் ஹாசன் மற்றும் அவருடைய ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு தமிழ்நாடு திரைப்பட வினியாகஸ்தர்கள் சங்கக் கூட்டமைப்பு தடை (ரெட்கார்டு) விதித்திருப்பது தெரியவந்தது கேட்டு மிகவும் அதிர்ந்துவிட்டோம். 

இந்தப் படத்தை EROS INTERNATIONAL என்கிற நிறுவனம் மினிமம் கேரண்டி (MG) முறையில் எங்களிடமிருந்து வாங்கியிருந்தது. இந்தத் தடையை அறிந்த EROS INTERNATIONAL நிறுவனம் AAGH (MG) PATHI முறையில் வாங்கிய உரிமையை ரத்து செய்துவிட்டு முற்றிலுமாக இப்படத்திலிருந்து விலகியது எங்களை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மேலும் அவர்கள் கொடுத்த முன்பணத்தை வட்டியுடன் கூடிய கடனாக மாற்றிக்கொண்டது. இந்நிலையில் இப்பட திரையரங்கு வெளியீட்டிற்கு முன் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் கமல் ஹாசன் மற்றும்அவருடைய ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு விதித்திருந்த தடையை எங்களின் பெரு முயற்சி மற்றும் பல தரப்பட்ட பேச்சு வார்த்தைகள் மூலம் தடையை நீக்கினோம்.

இந்நிலையில் இப்படத்தின் தமிழ்மொழி இசை வெளியீடு மிகச்சிறப்பான முறையில் சென்னையிலும் மற்றும் தெலுங்கு இசை வெளியீடு ஐதராபாத்திலும் நாங்கள் பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக நடத்தினோம். கமல் ஹாசன் உத்தமவில்லன் படத்தின் முதல் பிரதி எடுத்து எங்களுக்கு போட்டு காண்பித்த போது எனக்கு (என்.சுபாஷ்சந்திரபோஸ்) படம் முற்றிலுமாக பிடிக்கவில்லை ஆனால் என்னுடைய சகோதரர் இயக்குநர் லிங்குசாமி, அதில் சில காட்சிகளை எடிட் செய்தும், மாற்றியும் பிறகு படத்தை வெளியிடலாம் என்ற கருத்தை அவரிடம் தெரிவித்தார். அதற்கு அவரும் ஒப்புக்கொண்டார். ஆனால் சில நாட்கள் கழித்து நாங்கள் கூறிய காட்சிகளை எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே படத்தை வெளியிடலாமென்று கூறிவிட்டார்.

நாங்கள் தமிழ்நாடு, ஆந்திரா கேரளா மற்றும் கர்நாடகா முழுவதும் வெளியிட முயற்சி எடுத்த போது எவரும் இந்தப் படத்தை வெளியிட முன் வரவில்லை. இதனால் ஏற்பட்ட பண நெருக்கடியால் இத்திரைப்படம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதியான மே1, 2015 அன்று ரிலீஸ் ஆகவில்லை. இங்கு நடந்து கொண்டிருந்த அனைத்து விஷயங்களையும் நன்கு அறிந்திருந்த திரு கமல் ஹாசன் அவர்கள் அதை பொருட்படுத்தாமல் தன் வசம் இருந்த வெளிநாட்டு உரிமையை வைத்து மே1. 2015 வெளிநாடு முழுவதும் ரிலீஸ் செய்துவிட்டார். வெளிநாட்டில் இருந்து வந்த படத்தின் விமர்சனங்களால் இந்தப் படத்தை டிஸ்ட்ரிபியூஷன் முறைகளில் கூட வெளியிட யாரும் முன் வரவில்லை. இந்நிலையில் நாங்கள் திரு.கமல் ஹாசன் அவர்களைத் தொடர்புகொண்டு இந்தப் படத்தின் வெளிநாட்டு ரிலீசால் எங்களுக்கு ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலையை விவரித்தோம். 

கமல்ஹாசன் முன்பே அளித்த உறுதியின்படி எங்களுக்கு எழுத்துபூர்வமாக ரூ.30 கோடியில் (எல்லா வரிகளும் உட்பட) மீண்டும் ஒரு படம் செய்து தருவதாக உத்திரவாத கடிதமும், அந்தப் படத்தை அவருடைய நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான ஓர்இரவு (தூங்காவனம்) படத்திற்கு அடுத்து உடனடியாக தயாரித்தும் நடித்தும் தருவதாக உத்திரவாத கடிதமும் அளித்தார். இதை நம்பி நாங்கள் எங்கள் சொந்த செலவில் பெரும் தொகையை கடன் வாங்கி "உத்தமவில்லன்" படத்தை மே 2, 2015 அன்று வெளியிட்டோம். இத்திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய தோல்வியடைந்து எங்கள் நிறுவனத்திற்கு பொருளாதார ரீதியில் மிகப் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் சில மாதங்கள் கழித்து ஓர்இரவு(தூங்காவனம்) படத்தின் ஷூட்டிங் பாதி நிலையைத் தாண்டிய நிலையில், கமல் ஹாசனின் தொலைபேசி அழைப்பின் பேரில் அவரை நேரில் சந்தித்தோம். அப்பொழுது கமல்ஹாசன் நான் உங்களுக்கு ஒருபடம் ரூ.30 கோடியில் செய்துதருவதாக உத்திரவாதம் கொடுத்துள்ளேன். அதற்கு ஏன் நீங்கள் இப்பொழுது ஷூட்டிங் நடைபெற்று வரும் ஓர்இரவு தூங்காவனம் படத்தையே எடுத்துக்கொள்ளக்கூடாது என்று எங்களிடம் கேட்டார். அதற்கு நாங்கள் இந்தப் படம் எங்களுக்கு வேண்டாம் என்று கூறிவிட்டு, எங்களுக்குப் பிடித்த கதையில் ஒரு படத்தை செய்து தருமாறு மறுபடியும் கூறிவிட்டு வந்தோம். இதனால் அவர்கள் அளித்த உத்திரவாத கடிதத்தின் அடிப்படையில் பல முறை கமல்ஹாசனை நேரிலும் மற்றும் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டோம். ஒன்பது வருடங்கள் கழிந்தும் இதுவரை எங்களுக்கு படம் செய்து தருவதாக கூறியவர் செய்து தரவில்லை. இப்பட வெளியீட்டிற்கு கடன் கொடுத்த அனைவரும் எங்களுக்கு மிகவும் நெருக்கடி கொடுத்து கொண்டிருக்கிறார்கள். எனவே நமது சங்கம் தலையிட்டு கமல் ஹாசனிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்கள் அளித்த உத்திரவாத கடிதத்தின்படி எங்களுக்கு விருப்பமான கதையில் நடித்து தயாரித்து தருவதற்கு கால்ஷீட் பெற்று தரும்படி பணிவுடன் கேட்டுகொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்