Skip to main content

கலைஞர் நூற்றாண்டு பூங்கா - முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்!

Published on 07/10/2024 | Edited on 07/10/2024
cm MK Stalin opened kalaignar Centenary Park 

சென்னை கதீட்ரல் சாலையில், செம்மொழிப் பூங்காவிற்கு எதிரில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையினால் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (07.10.2024) திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞரின் சிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனையடுத்து பூங்காவினை முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார்.

இந்த பூங்காவில் கண்ணாடி மாளிகை, அயல்நாட்டுப் பறவையகம், பசுமை குகை, மர வீடு, அருவி, இசை நீரூற்று, குழந்தைகள் விளையாடும் இடம், பாரம்பரிய காய்கறித்தோட்டம், சிற்றுண்டியகம் முதலான சிறப்பு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கே.என். நேரு, சேகர்பாபு, பொன்முடி, எ.வ. வேலு, மா. சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் எழிலன், சென்னை மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ்குமார், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி தலைமைச்செயலாளர் முருகானந்தம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் அபூர்வா எனப் பலரும் கலந்துகொண்டனர்.

cm MK Stalin opened kalaignar Centenary Park 

இப்பூங்காவினை பார்வையிட நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.100, சிறியவர்களுக்கு ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர சிறப்பு அம்சங்களைப் பார்வையிட தனித்தனியே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜிப்லைனில் ஏறி சாகச பயணம் மேற்கொள்ளப் பெரியவர்களுக்கு ரூ.250,  சிறியவர்களுக்கு ரூ.200, குழந்தைகள் மடியில் அமர்ந்து செல்ல ரூ.150 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பறவையகத்தில் பல்வேறு வெளிநாட்டுப் பறவைகளைப் பார்வையிட மற்றும் உணவளித்து மகிழ்ந்திடப் பெரியவர்களுக்கு ரூ.150 சிறியவர்களுக்கு - ரூ.75, எனவும், மாலை நேரத்தில் இசை நீரூற்றின் கண்கவர் நடனத்தைக் காணப் பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு - ரூ.50 எனவும் கண்ணாடி மாளிகையில் அரிய வகை செடிகளைப் பார்வையிடப் பெரியவர்களுக்கு ரூ.50,  சிறியவர்களுக்கு ரூ.40 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பங்குபெறும் ஒரு சவாரி விளையாட்டுக்கு ரூ.50 எனவும், புகைப்படக் கருவிகளுக்கு (camera) ரூ.100 எனவும், ஒளிப்பதிவு கருவிகளுக்கு (video camera) 5 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்