Skip to main content

‘முதல்வர் மருந்தகம்’ - சுதந்திர தின உரையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!

Published on 15/08/2024 | Edited on 16/08/2024
CM MK Stalin announcement for Chief Minister Pharmacy

நாட்டின் 78வது சுதந்திர தின கொண்டாட்டம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். அதே போன்று சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

அதில் “முதல்வர் மருந்தகம்” என்ற திட்டமும் ஒன்று ஆகும். இதன் மூலம் பொதுப் பெயர் வகை (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும் வகையில், ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டத்தைச் செயல்படுத்தவிருக்கிறது திமுக அரசு. பொங்கல் திருநாள் முதல் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்தின்கீழ், முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும். இந்தத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திட, மருந்தாளுநர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடனுதவியோடு மூன்று இலட்சம் ரூபாய் மானிய உதவியாக அரசால் வழங்கப்படும்.

இது தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கிற ஒரு முக்கியமான திட்டம் மட்டுமல்லாமல், டி.  பார்ம் (D.Pharm) மற்றும் பி. பார்ம் (B.Pharm) படிப்பு முடித்தவர்களுக்குச் சொந்த தொழில் தொடங்கிட வாய்ப்பு அளிக்கும் அற்புதமான திட்டமாகும். இந்தத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திட, மருந்தாளுநர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடனுதவியோடு மூன்று இலட்சம் ரூபாய் மானிய உதவியும் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும்.

இந்த மருந்தகங்களுக்குத் தேவையான தரமான மருந்துகள், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கார்ப்பரேஷன் லிமிடெட் (TNMSC) மூலம் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கொள்முதல் செய்யப்படும். குறிப்பாக, பொதுப்பெயர் வகை (ஜெனரிக்) மருந்துகள் மிகக் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும். இந்தத் திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களில் முதற்கட்டமாக 1000 மருந்தகங்கள் தொடங்கப்படவுள்ளது.

முந்தைய காலங்களில் கூட்டுறவு மருந்தகங்கள் கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்பட்டு வந்த நிலையில், 2016 ஆம் ஆண்டு முதல் அன்றைக்கு ஆட்சியில் இருந்த அதிமுக ஆட்சியில் புதிதாகத் தொடங்கப்பட்ட கூட்டுறவு மருந்தங்களுக்கு அம்மா மருந்தகம் எனப் பெயரிடப்பட்டது. இம்மருந்தகங்கள் கூட்டுறவு மருந்தகங்களைப் போன்றே சங்கங்களால் நடத்தப்பட்டன; தொழில் முனைவோர் ஈடுபடுத்தப்படவில்லை. கூட்டுறவு மருந்தகம் மற்றும் அம்மா மருந்தகம் 380 எண்ணிக்கையில் மட்டுமே மாநிலம் முழுவதும் செயல்படுகின்றன. அம்மா மருந்தகங்களில் குறிப்பிட்ட வகை மருந்துகள் (Branded medicines) மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. 

சார்ந்த செய்திகள்