![Child Welfare Police Room to protect the children ...!](http://image.nakkheeran.in/cdn/farfuture/4Mm7idDT53_1jp6MXx3yTD4n3Ehwlu3HMyT_JbG7oPY/1605698579/sites/default/files/inline-images/th_221.jpg)
2016ஆம் ஆண்டில் கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில், குழந்தை நேய காவல் அறை துவங்கப்பட்டது. இந்தத் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றதால், கேரள அரசு தொடர்ந்து அதைச் செயல்படுத்தி, தற்போது 85 காவல்நிலையங்களில் இதுபோன்ற குழந்தை நேய காவல் அறையை அமைத்துள்ளது.
இந்தத் திட்டம், கேரளாவில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றதால், தமிழகமும் அதைச் செயல்படுத்தத் துவங்கியது. அதன் முதல்கட்டமாக, கடந்த ஆண்டு இதே நவம்பர் மாதத்தில் திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மூன்று அனைத்து மகளிர் காவல்நிலையங்களில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் மற்றும் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் ஆகியோர், குழந்தை நேய காவல் அறையைத் திறந்து வைத்தனர்.
![Child Welfare Police Room to protect the children ...!](http://image.nakkheeran.in/cdn/farfuture/As7vnhIdAIy5MNPGSOYlVPBGLh2pAdDjgnnRb7Qm67w/1605698605/sites/default/files/inline-images/th-in-1_4.jpg)
அதனைத் தொடர்ந்து, இந்தக் குழந்தை நேய காவல் அறை, திருச்சி மாவட்டத்தில் 10 இடங்களில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையங்களிலும், கடந்த 16ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது.
குழந்தைகளுக்கு எதிரான பலவித வன்முறைகளும், பாலியல் குற்றங்களும் கடந்த சில வருடங்களில் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க, சட்ட ரீதியாகப் பாலியல் குற்றங்களிலிருந்து 'குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012', 'குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டம் 2015'ன் படி, 18 வயதுக்குக் கீழ் உள்ள அனைத்துக் குழந்தைகளும், இந்தச் சட்டங்களின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இந்தச் சட்டத்தின் கீழ் நீதித்துறை, பல்வேறு பாதுகாப்புகளைக் குழந்தைகளுக்கு வழங்கினாலும் குழந்தைகளுக்கான வன்முறையும், அடக்குமுறையும், அதன் துவக்கத்திலேயே தடுக்கும் விதமாகக் குழந்தை நேய காவல் அறை துவங்கப்பட்டுள்ளது.
![Child Welfare Police Room to protect the children ...!](http://image.nakkheeran.in/cdn/farfuture/GhIS2fyNZB9En4eYtSPSX7NPJ5TRi0RM_hl3dNozq20/1605698622/sites/default/files/inline-images/th-1_2.jpg)
இந்த அறைகள் திறக்கப்பட்டதற்கான சில முக்கியக் காரணங்கள் குறித்து திருச்சி சரக டி.ஐ.ஐி ஆனி விஜயா கூறுகையில், “காவல்நிலையங்களுக்குக் குழந்தைகள் பயமின்றி வரவும், காவல்துறையினரை நட்புடன் அணுகும் வகையிலும் இந்த குழந்தை நேய காவல் அறை துவங்கப்பட்டுள்ளது. பலவித இன்னல்களுக்கு ஆளாகும் குழந்தைகள் வீட்டில் இருந்தபடியே '18001211283' என்ற இலவச எண்ணிற்குத் தங்களுடைய புகார்களை தெரிவிக்கலாம். காவல் நிலையங்களுக்குக் குழந்தைகளுடன் வரும் பெண்கள், மன அமைதியுடன் திரும்பிச் செல்லும்படியாகவும், தாய்மார்கள் குழந்தைகளுக்குப் பால் கொடுக்கவும், பேறுகால பெண்கள் வந்து ஓய்வு எடுக்கும் நோக்கத்திற்காகவும் இந்த அறை துவங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.