![Chief Justice Sanjib Banerjee transferred, President approves](http://image.nakkheeran.in/cdn/farfuture/LrxbWmaa-U6xx8Xhjq28bM_HpXIBZPEk9-Gt25FkhFI/1636996711/sites/default/files/inline-images/judge-sanjeeb-banerjee_4_0.jpg)
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யும் கொலிஜியத்தின் பரிந்துரைக்கு இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்ற முடிவு செய்து உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் மத்திய சட்டத்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைச் செய்தது.
இந்த நிலையில், கொலிஜியம் தனது பரிந்துரையை மறுபரிசீலனைச் செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். முதலில் 237 வழக்கறிஞர்கள் கடிதம் எழுதிய நிலையில், அதனைத் தொடர்ந்து, 31 மூத்த வழக்கறிஞர்கள் கொலிஜியத்துக்கு கடிதம் எழுதினர். அதே கோரிக்கையை வலியுறுத்தி மெட்ராஸ் பார் அசோசியேஷனில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
அதைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள ஆவின் நுழைவு வாயில் அருகே வழக்கறிஞர்கள் அமைதி வழியில் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் வழக்கறிஞர்கள் பலர் பங்கேற்று தலைமை நீதிபதியை இடமாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தினர்.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றும் கொலிஜியத்தின் பரிந்துரைக்கு இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
அரசியல் சட்டப்பிரிவு 222ன் 1ஆம் உட்பிரிவின் கீழ் தலைமை நீதிபதியின் பணியிட மாற்றத்துக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.