Skip to main content

சென்னையில் பயங்கர தீ விபத்து!

Published on 17/10/2024 | Edited on 17/10/2024
Chennai Choolaimedu Old iron goods godown incident

சென்னை சூளைமேடு பகுதியில் பழைய இரும்பு பொருட்கள் குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் தரைத் தளம் மற்றும் முதல் தளம் என இரு தளங்கள் உள்ளன. இந்நிலையில் தான் இன்று (17.10.2024) இரவு 10 மணியளவில் யாரும் எதிர்பாராத விதமாக தீடிரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது குடோனின் இரு தளங்களில் உள்ள பெரும்பாலான பகுதியில் பரவி உள்ளது.

இதனால் அந்தப் பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து கீழ்பாக்கம் மற்றும் அசோக் நகர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் கடந்த அரை மணி நேரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதோடு பாதுகாப்பு கருதி அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து பொதுமக்களை காவல்துறை வெளியேற்றியுள்ளனர்.

மேலும், குடோனில் இருந்தவர்களின் நிலைமை குறித்து எவ்வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை. அதே சமயம் இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசாரின் முழு விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பழைய இரும்பு பொருட்கள் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.  

சார்ந்த செய்திகள்