சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் திரைப்பட இயக்குநர் கே. பாலசந்தரின் மார்பளவு சிலையை நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து திறந்து வைத்தனர். மேலும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து, இயக்குனர் மணிரத்னம், நடிகை ஸ்ருதிஹாசன், நடிகர் நாசர், கே.பாலசந்தரின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து இயக்குனர் பாலச்சந்தரின் நினைவுகள் குறித்து, திரையுலக பிரபலங்கள் சிறப்புரையாற்றினர்.
![CHENNAI ALWARPETTAI ACTOR KAMAL HASSAN DIRECTOR BALACHANDER](http://image.nakkheeran.in/cdn/farfuture/8OENwHjxjmoUd8WLpnwQKCW6O0qScn3cwm_MXNclPFg/1573192696/sites/default/files/inline-images/KAMAL3333888.jpg)
அப்போது பேசிய ரஜினிகாந்த், "கலையுலக அண்ணன் கமல்ஹாசனுக்கும் மற்றும் அனைவருக்கும் நன்றி. என்னைப்போல பல கலைஞர்களுக்கு தந்தை, பிதாமகன் குரு பாலச்சந்தர் தான். அரசியலுக்கு வந்தாலும், தாய் வீடான சினிமாவை கமல் மறக்க மாட்டார். கமலின் விக்ரம் படம் பற்றி தான் தம்பிக்கு எந்த ஊரு இயக்குனர் ராஜசேகரன் தினமும் பேசுவார். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இல்லாத காலத்திலேயே அபூர்வ சகோதரர்கள் படம் எடுத்தவர் கமல். அபூர்வ சகோதரர்கள் படம் பார்த்து விட்டு நள்ளிரவு கமல் வீட்டிற்கு சென்று வாழ்த்தினேன். நான் அடிக்கடி பார்க்கும் படங்கள் திருவிளையாடல், ஹேராம், காட்ஃபாதர் தான். ஹேராம் படத்தை 30, 40 தடவை பார்த்துள்ளேன். ஒவ்வொரு முறையும் ஒவ்வொன்று புரியும். பாலச்சந்தருக்கு பிடித்த குழந்தை கமல் தான். கமல் மீது அவருக்கு அபார பிரியம்" என்று பேசினார்.