Skip to main content

உலகச் சுற்றுச்சூழல் நாள்: பிளாஸ்டிக் பை இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றுக! அன்புமணி வலியுறுத்தல்

Published on 04/06/2018 | Edited on 04/06/2018

உலகச் சுற்றுச்சூழல் நாள் பிளாஸ்டிக் பை இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

உலகின் முதல் சுற்றுச்சூழல் மாநாடு 1972 ஆம் ஆண்டு சுவீடன் நாட்டின் ஸ்டாக்கோம் நகரில்  ஜூன் 5-ஆம் தேதி கூட்டப்பட்டதை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலகச் சுற்றுச்சூழல் நாள் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. 'பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிப்போம்' (Beat Plastic Pollution) என்பதை இந்த ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் நாள் முழக்கமாக ஐநா அவை முன் வைத்துள்ளது. ஐ.நா. சார்பில் 2018 உலக சுற்றுச்சூழல் நாளை கொண்டாடும் முதன்மை நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கிறார்.
 

பிளாஸ்டிக் குப்பை மிகமிக ஆபத்தானது, அணுகுண்டுகளை விட ஆபத்தானவை என்று இந்திய உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.  ஒரு பிளாஸ்டிக் பை சராசரியாக வெறும் 12 நிமிடங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பின்னர் குப்பையில் எறியப்படுகிறது. ஆனால், அது 1000 வருடங்களுக்கு அழியாமல் இருந்து சுற்றுச்சூழலைக் கெடுக்கும். உலக அளவில் ஆண்டுக்கு 5 லட்சம் கோடி பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் ஆண்டுக்கு 1.30 கோடி டன் பிளாஸ்டிக் கடலில் கலக்கிறது. பிளாஸ்டிக் பைகளைத் தின்று கால்நடைகள், வனவிலங்குகள் ஏராளமாக இறக்கின்றன. கடல்வாழ் திமிங்கலங்கள், சீல்கள் மற்றும் பறவைகள் சாகின்றன. கடலின் இயற்கை சூழல் முற்றாக சீரழிக்கப்படுகிறது.

 

பிளாஸ்டிக் குப்பை சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் வழிகின்றன, சுற்றுப்புறம் மாசுபடுகிறது. சாலையோரங்களில் தேங்கிக்கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்தி டெங்கு, மலேரியா எனப்பல நோய்களுக்கு காரணமாகிறது. மழைக்காலங்களில் வெள்ள பாதிப்புக்கும் பிளாஸ்டிக் பைகளே காரணமாகின்றன. பிளாஸ்டிக் பைகளால் ஆறுகள், குளங்கள், ஓடைகள், ஏரிகள், நிலத்தடி நீர் என எல்லா நீர்வளமும் கடுமையாக மாசுபடுகிறது. பிளாஸ்டிக் கழிவு உள்ளிட்ட குப்பையை எரிப்பதால் மிக ஆபத்தான நச்சுவாயுக்கள் காற்றில் கலக்கின்றன. டையாக்சின் உள்ளிட்ட பலவிதமான நச்சு வாயுக்கள் வெளியாகின்றன. அதிகரிக்கும் புற்றுநோய், ஆண்மைக் குறைவு, குழந்தையின்மை குறைபாடுகளுக்கு குப்பை எரிப்பும் ஒரு முதன்மைக் காரணம் ஆகும். தோல்நோய், ஈரல் பாதிப்பு, ஆஸ்துமா, இருதய நோய்கள் என பலக் கேடுகளுக்கு குப்பை எரிப்பு காரணமாகும். குப்பை பிரச்சினையும் பிளாஸ்டிக் மாசுபாடும் ஒன்றிணைந்த கேடுகள் ஆகும். இதனை எதிர்க்கொள்ள அனைத்து குப்பைகளையும் கையாளும் அனைத்து விதிகளையும் முறையாக செயல்படுத்த வேண்டும்.


 

Change the state of Tamil Nadu as a non-plastic state


 

திடக்கழிவு, பிளாஸ்டிக் கழிவு, மின்னணு கழிவு, ஆபத்தான கழிவு, மருத்துவக் கழிவு, கட்டடக் கழிவு என குப்பை மேலாண்மைக்கான 6 விதிகள் 2016 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்திய அரசால் வெளியிடப்பட்டன. மாநிலங்களும் நகராட்சிகளும் இந்த விதிகளை செயலாக்குவதற்கான பொதுவான கால அவகாசம் ஓராண்டு வரை அளிக்கப்பட்டது. ஆனால்,மாநில அரசுகளும், உள்ளாட்சி அமைப்புகளும் இவற்றை முறையாக செயல்படுத்தத் தவறிவிட்டன. மாநில அரசுகளின் மெத்தனப்போக்கை கண்டித்த இந்திய பசுமைத் தீர்ப்பாயம் 2017 ஜூன் 1 முதல் குப்பை மேலாண்மை விதிகளை தமிழக நகரங்கள் உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து நகரங்களும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. கடந்த ஆண்டு 2017 ஜூன் 5 சுற்றுச்சூழல் தினத்திலிருந்து நாட்டின் எல்லா நகரங்களிலும் திடக்கழிவு மேலாண்மைக்கான பிரச்சார இயக்கத்தை தொடங்குவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ஆனால், ஓராண்டு காலம் கடந்த பின்னரும் இன்னமும் கூட சட்டவிதிகள் வெற்று காகிதமாகவே உள்ளன. அதே போன்று இந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினத்தில் தொடங்கும் பிளாஸ்டிக் ஒழிப்பு பிரச்சாரமும் வாய்ப்பேச்சாக முடிந்துவிடக் கூடாது.
 

தமிழ் நாடு அரசு திடக்கழிவு மேலாண்மை விதிகளையும், பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை விதிகளையும் முழுமையாக செயல்படுத்த வேண்டும். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அவர்களது பொருட்களால் உருவாகும் குப்பையை அவர்களே வாடிக்கையாளரிடமிருந்து திரும்பவும் காசுகொடுத்து வாங்கிக்கொள்ளும் சட்டபூர்வமான ‘‘உற்பத்தியாளரே பொறுப்பேற்கும் கொள்கையை’’ செயல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சி அமைப்புகள் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க வேண்டும். கடைகள், வர்த்தக நிறுவனங்கள் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பழக்கத்தை கைவிட்டு துணிப்பைகளுக்கு மாற வேண்டும். பொதுமக்கள் கடைகளுக்கு துணிப்பையை கொண்டு செல்வதன் மூலம் பிளாஸ்டிக் பை கலாச்சாரத்தை ஒழிக்க உலக சுற்றுச்சூழல் நாளில் உறுதியேற்க வேண்டும்.
 



  

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.