கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சேலம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட பழனிசாமி, தனது வேட்புமனுவின் பிரமாணப் பத்திரத்தில் சொத்து மதிப்பை தவறாகத் தெரிவித்துள்ளதாக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மிலானி என்ற வாக்காளர் ஒருவர் சேலம் தனிநபர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இதனை விசாரித்த தனிநபர் நீதிமன்றம் இது தொடர்பாக விசாரணை நடத்தி முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்யலாம் என்று கூறியதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கில் உரிய விசாரணை நடத்த சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும் விசாரணை நடத்தி மே 26 ஆம் தேதிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில் முதற்கட்டமாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் எடப்பாடி பழனிசாமியின் சொத்து பத்திரங்கள், வங்கிக் கணக்குகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.