Skip to main content

ஆண்டுதோறும் கர்நாடகாவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தமிழ்நாடு!

Published on 29/07/2021 | Edited on 29/07/2021

 

 

Cauvery water Tamil Nadu is looking forward to Karnataka every year!

 

காவிரி நீருக்காக ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு அண்டை மாநிலமான கர்நாடகாவை எதிர்பார்த்துக் காத்திருப்பது தொடர்கதையாகிவருகிறது. 

 

கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, கர்நாடக மாநில அரசு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. நீரை தமிழ்நாட்டிற்கு தர வேண்டும். ஆனால், அதன்படி ஒருமுறைகூட கர்நாடகா வழங்கியது இல்லை. அங்கு கனமழை பெய்யும்போது மட்டும், தமிழ்நாட்டிற்கு உபரி நீர் கிடைக்கிறது. நீர் பாசன ஆண்டான ஜூன் மாதம் முதல் மே மாதம் வரை மாதந்தோறும் தமிழ்நாட்டிற்கு எவ்வளவு நீர் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

அதிகபட்சமாக ஆகஸ்ட் மாதம் 45.95 டி.எம்.சி. நீர் வழங்க வேண்டும். செப்டம்பர் மாதம் 36.76 டி.எம்.சி.யும், ஜூலை மாதம் 31.24 டி.எம்.சி.யும், அக்டோபர் மாதத்தில் 20.22 டி.எம்.சி.யும் வழங்க வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவை. ஆனால், நீதிமன்ற உத்தரவை கர்நாடகா அரசு பின்பற்றுவதில்லை. இந்த நிலையில், பருவமழை காரணமாக, கர்நாடகாவில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளதால், உபரி நீர் திறக்கப்பட்டுவருகிறது. இருப்பினும், தமிழ்நாட்டிற்கு ஜூன், ஜூலை மாதங்களில் வழங்க வேண்டிய 40 டி.எம்.சி. தண்ணீருக்குப் பதிலாக, இதுவரை 18 டி.எம்.சி. அளவுக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நிரம்புவதால் உபரி நீரைத் திறந்து, அதை தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நீராக கணக்கிட்டுக்கொள்கிறது கர்நாடக அரசு. அதுமட்டுமின்றி, கர்நாடகாவைப் பொறுத்தவரை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பின்பற்றாத போக்கே தொடர்கிறது.

 

இன்னும் மூன்று தினங்கள் மட்டுமே உள்ள நிலையில், மீதமுள்ள 22 டி.எம்.சி. தண்ணீரைப் பெற தமிழ்நாடு அரசு, மத்திய அரசையும், காவிரி மேலாண்மை ஆணையத்தையும் அணுகி நமக்கான பங்கீனைக் கேட்டுப் பெற வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.