Skip to main content

பண பங்கீட்டுத் தகராறில் சித்தியை கொலை செய்த தனயன்...!

Published on 25/11/2019 | Edited on 25/11/2019

இறந்த அப்பாவின் பணிக்கொடை பணத்தை, ஆளுக்கு இவ்வளவு என..? பங்கு போடுவதில், சித்திக்கும் தனயனுக்கும் நடந்த தகராறில் மரக்கட்டையினால் சித்தியை தனயன் அடித்துக் கொன்றுள்ளார்.

 

 Cash dispute issue



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் 9வது தெருவைச் சேர்ந்தவர் கோகிலா. இவருடைய அக்கா மகேஷ்வரி 16 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட, தனது அக்காவின் கணவரும், நியாய விலைக்கடை ஊழியருமான பாண்டிக்கு மனைவியானார். அதன்பிறகு கோகிலா, தனது மகன் மகேந்திரனுடன், சகோதரி மகேஷ்வரிக்கு பிறந்த கவிதா என்ற பெண் மற்றும் மணிகண்டன் என்ற ஆண் ஆகிய இருகுழந்தைகளையும் சேர்த்து பார்த்துக்கொண்டுவந்துள்ளார்.

பின்னர் கவிதா திருமணமாகி வெளியூர் செல்ல, மணிகண்டனோ தவறான சகவாசத்தால் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, அடிதடிகளில் ஈடுப்பட்டு அடிக்கடி சிறை சென்று வந்திருக்கின்றார். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவர் பாண்டியும் இறந்துவிட, மணிகண்டனின் நிலை முற்றிலும் மாறியுள்ளது.

இது இப்படியிருக்க, பாண்டி இறப்பினால் பணிக்கொடையாக ரூ.2 லட்சம் அரசிடமிருந்து சமீபத்தில் வந்திருக்கின்றது. அதேவேளையில், கடந்த சிலமாதங்களுக்கு முன்பு ஒரு வழக்கில் சிறை சென்று இருந்த மணிகண்டன் கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த பணிக்கொடை பணம் மணிகண்டனுக்கு தெரியவர, அதில் பங்கு கேட்டு சித்தி கோகிலாவிடம் தினசரி சண்டையிட்டிருக்கின்றார்.

எனினும் கோகிலா பணத்தை தரவில்லை. இவ்வேளையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு கோகிலாவின் மகன் மகேந்திரன் தனது பள்ளி சுற்றுலாவிற்கு சென்றுவிட்டு நேற்று வீடு திரும்பிய வேளையில், தனது தாயார் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை அறிந்து உறவினர்களுக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி டி.எஸ்.பி.ஜெபராஜ் மற்றும் மேற்கு காவல் நிலைய போலீசார் பிணத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் பணம் பங்கீட்டு பிரச்சனை தெரியவர மணிகண்டனை பிடித்து மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், " பணம் பங்கீடு தொடர்பாக இருவருக்கும் பிரச்சனை எழுந்ததாகவும், கோபத்தில் அருகிலிருந்த மரச்சேரை உடைத்து மரக்கட்டைகளைக் கொண்டு கோகிலாவை அடித்துக் கொன்றதாக மணிகண்டன் ஒப்புக்கொண்டுள்ளார்". சித்தியை உடன் பிறந்த சகோதிரி மகனே கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
 

சார்ந்த செய்திகள்